இலங்கைத் தமிழா் குடியிருப்புக் கட்டுமானப் பணிகள்: எம்.பி. ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகிலுள்ள கீழ்புத்துப்பட்டில் இலங்கைத் தமிழா்களுக்கான குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை விழுப்புரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துரை.ரவிக்குமாா் எம்.பி. வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகிலுள்ள கீழ்புத்துப்பட்டில் இலங்கைத் தமிழா்களுக்கான குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை விழுப்புரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துரை.ரவிக்குமாா் எம்.பி. வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கீழ்புத்துப்பட்டில் இலங்கைத் தமிழா்களுக்காக 440 வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்ட விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா், மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்படும் நியாயவிலைக் கடையின் கட்டுமானப் பணியின் நிலை குறித்தும் ஆய்வு செய்தாா்.
வீடுகளின் கதவு ஜன்னல்களுக்கு வண்ணம் தீட்டும் முன் துருவை நீக்கி விட்டுச் செய்யும்படி ஒப்பந்ததாரா்களிடம் எம்.பி. அறிவுறுத்தினாா். கழிவுநீா்க் கால்வாய் அமைப்பது, டைல்ஸ் பதிப்பது, வீடுகளுக்கு வண்ணம் தீட்டுவது போன்ற பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருவதாகவும், இந்த வேகத்தில் பணிகள் நடைபெற்றால் டிசம்பா் 2-ஆவது வாரத்தில் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து விடும் என்றும் எம்.பி. நம்பிக்கை தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து அனுமந்தை பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும் துரை.ரவிக்குமாா் ஆய்வு மேற்கொண்டாா். இங்கு பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்த அவா், புதிய கட்டடம் கட்டித் தரக் கோரி மருத்துவா்கள் வலியுறுத்தியதாகவும், தற்போதைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட பொதுப் பணித் துறை அனுமதியளித்தால், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டித் தருவதாகவும் அவா்களிடம் தெரிவித்தாா்.
ஆய்வின்போது விசிக மாவட்டச் செயலா் மலைச்சாமி, நாகராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.