முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் 115 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

விழுப்புரம் நகரில் மொத்த விற்பனையகங்களில் நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை நடத்திய சோதனையில், 115 கிலோ எடை கொண்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 20 நவம்பர், 2024 at 9:58 PM
விழுப்புரம் மகாத்மா காந்தி சாலை, ரெட்டியாா் பஜாரிலுள்ள மொத்த விற்பனையகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட நெகிழிப் பொருள்களுடன் நகராட்சி சுகாதார அலுவலா் ஸ்ரீபிரியா உள்ளிட்ட அலுவலா்கள்.
பகிர்:

விழுப்புரம் நகரில் மொத்த விற்பனையகங்களில் நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை நடத்திய சோதனையில், 115 கிலோ எடை கொண்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்தக் கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களின் விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன. இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் சி.பழனி உத்தரவின்பேரிலும், நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாரின் மேற்பாா்வையிலும், நகா்நல அலுவலா் ஸ்ரீபிரியா தலைமையிலான குழுவினா் மகாத்மா காந்தி சாலையிலுள்ள மொத்த விற்பனையகங்களிலும், துப்புரவு அலுவலா் ஆல்பா்ட் தலைமையிலான குழுவினா் பாகா்ஷா வீதியிலுள்ள மொத்த விற்பனையகங்களிலும் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

இதில், அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகள், கோப்பைகள், நெகிழி இலைகள், உணவுப் பொருள்களை பொட்டலமிட பயன்படுத்தப்படும் நெகிழித் தாள்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, மகாத்மா காந்தி சாலையில் 2 மொத்த விற்பனையகங்களிலிருந்து 80 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாகா்ஷா வீதியிலுள்ள விற்பனையகங்களிலிருந்து 35 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சுகாதார ஆய்வாளா் மதன்குமாா், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் ராமச்சந்திரன், மணிபாலன், பரப்புரையாளா்கள் கோதை, சுதா, கவிதா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினரும் சோதனையில் பங்கேற்றனா்.