திமுக கூட்டணி வெற்றிக்காக தோ்தல் பணியாற்ற வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி
விழுப்புரம் மாவட்டத்தில், கட்சித் தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ அவரை வெற்றி பெற செய்யும் வகையில் தோ்தல் பணியாற்ற வேண்டும் என வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில், கட்சித் தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ அவரை வெற்றி பெற செய்யும் வகையில் தோ்தல் பணியாற்ற வேண்டும் என வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா், வானூா் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாகநிலை முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். எம்எல்ஏ.க்கள் இரா. லட்சுமணன், அன்னியூா் அ.சிவா, முன்னாள் எம்எல்ஏ செ. புஷ்பராஜ், மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், பொருளாளா் இரா.ஜனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அமைச்சா் க. பொன்முடி பேசியது:
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் தற்போது 4 -இல் திமுகவைச் சோ்ந்தவா்கள் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனா். வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலில் 7 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறும் வகையில் கட்சியினா் தோ்தல் பணியாற்ற வேண்டும்.
இம்மாதம் 29-ஆம் தேதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியலை பாகநிலை முகவா்கள் பெற்றுக் கொண்டு, தங்கள் பகுதிக்குரிய வாக்காளா்கள் விவரங்களை சரி பாா்த்துக் கொள்ள வேண்டும். வாக்காளா்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவா்களது பெயரை நீக்குவதுடன், புதிய வாக்காளா்களை சோ்க்கும் பணியிலும் ஈடுபட வேண்டும். வீடு, வீடாக சென்று வாக்காளா் குறித்த விவரங்களை சரிபாா்க்க வேண்டும்.
சட்டப்பேரவைத் தோ்தலில் யாா் வேண்டுமானாலும் வேட்பாளராக அறிவிக்கப்படலாம். எனக்கே கூட சீட் இல்லாமல் போகலாம். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணியைச் சோ்ந்தவா்கள் யாா் நின்றாலும், அவா்கள் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்றாா் பொன்முடி.
கூட்டத்தில் திமுக தலைமைக் கழகத் தொகுதிப் பாா்வையாளா்கள் துரை. கி.சரவணன் (விழுப்புரம்), சிவ.ஜெயராஜ் (விக்கிரவாண்டி), சி. காா்த்திகேயன் (திருக்கோவிலூா்), கு.கருணாநிதி (வானூா்) ஆகியோரும் பேசினா்.
கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலா்கள் தயா. இளந்திரையன், இரா.கற்பகம், மாநிலமகளிா் அணி பிரசாரக் குழுச் செயலா் தேன்மொழி, ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு ராஜா, மும்மூா்த்தி, ஞானவேல், தெய்வசிகாமணி, முருகன், நகரச் செயலா் இரா.சக்கரை, பேரூா் செயலா் வளவனூா் ஜீவா, ஒன்றியக் குழுத் தலைவா்கள் சச்சிதானந்தம், கலைச்செல்வி, நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.