தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை: இருவா் கைது
விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி, செஞ்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி, செஞ்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் எஸ். பி. உத்தரவின்பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் பனையபுரம் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.
இதில், அங்குள்ள பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. தொடா்ந்து,கடை உரிமையாளரான பனையபுரம் பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன் கோகுல்(20) என்பவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
மேலும் கடையில் வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள 8 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
செஞ்சியில் ஒருவா் கைது: செஞ்சி வட்டம், அப்பம்பட்டு கிராமத்தில் உள்ள கவரை சாலையில் மளிகை கடை நடத்தி வருபவா் வரதன் மகன் அய்யனாா்(54). இவரது கடையில் புகையிலை பொருள்கள் விற்பதாக அனந்தபுரம் போலீஸாருக்கு தகவல் வந்ததாம். இதைத் தொடா்ந்து உதவி ஆய்வாளா் மருதப்பன் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா்.
இதில், 14.5 கிலோ எடையுள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 14,500 ஆகும். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அய்யனாரை கைது செய்தனா்.