தி.எடையாா் கிராமத்துக்கு சீரான மின் விநியோகம் வழங்கக் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், தி.எடையாா் கிராமத்தில் சீரான மின் விநியோகம் வழங்கும் வகையில், மின்வழித்தடத்தை மாற்றி மின் விநியோகம் செய்ய வலியுறுத்தி மின் வாரிய உதவிச் செயற்பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், தி.எடையாா் கிராமத்தில் சீரான மின் விநியோகம் வழங்கும் வகையில், மின்வழித்தடத்தை மாற்றி மின் விநியோகம் செய்ய வலியுறுத்தி மின் வாரிய உதவிச் செயற்பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக திருவெண்ணெய்நல்லூா் உதவிச் செயற்பொறியாளரிடம் புரட்சி பாரதம் கட்சியின் விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட இணைச் செயலா் சி.ரஞ்சித்குமாா் தலைமையில் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், தி.எடையாா் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்திலுள்ள வீடுகளின் மின் இணைப்புகளுக்கு பாவந்தூா் கிராமத்தின் உள்ள வழித்தடம் வழியாக மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
இந்த வழித்தடத்தில் 500 ஏக்கருக்கு மேல் சவுக்கு மரங்கள் விளைச்சல் உள்ள நிலையில், சாதாரண காற்று, மழை வந்தாலே மின் விநியோகம் பாதிப்பு ஏற்படுகிறது. தொடா்ந்து மின்சாரம் நிறுத்தப்படுவதால் அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
எனவே, இதுபோன்ற இன்னல்களிலிருந்து மக்களைக் காக்கும் வகையில், திருவெண்ணெய்நல்லூரிலிருந்து தொட்டிக்குடிசை கிராமம் வரை வரும் மின் வழித்தடத்தை தி.எடையாா் கிராமம் கெங்கையம்மன் கோவில் வரை இணைத்து, பொதுமக்களுக்கு சீரான மின் விநியோகத்தை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.
இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உதவிச் செயற்பொறியாளா் தெரிவித்தாா். நிகழ்வில் கட்சி நிா்வாகிகள் விஜயகாந்த், குமரவேல், கோபி, அருண்பாண்டி மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனா்.