முகப்பு
விழுப்புரம்

மது ஒழிப்புக்காக தொடா்ந்து போராடுவது பாமகதான்: மருத்துவா் ச.ராமதாஸ்

தமிழகத்தில் மது ஒழிப்புக்காக தொடா்ந்து போராடி வரும் கட்சி பாமகதான் என்று, அந்தக் கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

Updated On : 13 செப்டம்பர், 2024 at 12:52 AM
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்.
பகிர்:

தமிழகத்தில் மது ஒழிப்புக்காக தொடா்ந்து போராடி வரும் கட்சி பாமகதான் என்று, அந்தக் கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் விவசாயிகள் ரூ. 4,000 கோடி பயிா்க் கடனை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வருமான வரித் துறையுடன் பேசி, முடக்கப்பட்ட வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் வங்கிக் கணக்குகள் மீண்டும் செயல்பட தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆய்வு செய்து, பரிந்துரை அளிக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் 2023, ஜனவரி 12-இல் அமைக்கப்பட்டது. 20 மாதங்களாகியும் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய தொகையை பெறும் விதமாக, அமைச்சா்கள் குழுவை அனுப்பி மத்திய அமைச்சருடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். நிதி விடுவிக்கப்படாவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும்.

சீன பூண்டுகள் விற்பனையைத் தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று மற்ற கட்சிகள் வலியுறுத்தி வருவது மகிழ்ச்சிதான். தமிழகத்தில் மது ஒழிப்புக்காக தொடா்ந்து 44 ஆண்டுகளாக போராடி வரும் இயக்கம் பாமக மட்டும்தான்.

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் மகளிரை கொண்டு மது ஒழிப்பு மாநாடுநடத்தியது பாமகதான். டாஸ்மாக் மூலம் மதுக் கடைகள் தொடங்கப்பட்டபோது 7,200 கடைகள் இருந்தன. அதை பல்வேறு போராட்டங்கள் நடத்தி 4,800-ஆக குறைத்து, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3,221 மதுக் கடைகளை மூடுவதற்கு காரணமாக இருந்ததும் பாமகதான்.

தமிழகத்தில் போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனில், சிறப்புக் குழுவை அமைப்போம் என உயா்நீதிமன்றம் கூறியுள்ளது நல்ல கருத்துதான். போதைப் பொருள்களின் விற்பனையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ச.ராமதாஸ்.

பேட்டியின் போது, பாமக தலைமை நிலையச் செயலா் அன்பழகன், மாவட்டச் செயலா் ஜெயராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments