முகப்பு
விழுப்புரம்

இலவச தையல் இயந்திரம்: மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் வழங்கப்படும் விலையில்லா தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 1:02 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் வழங்கப்படும் விலையில்லா தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி தெரிவித்திருப்பது:

விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத, குறைந்த அளவிலான மனவளா்ச்சிக் குன்றியவா், 75 சதவீதம் மேல் மனநலன் குன்றிய தாய்மாா்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டும் வகையில், மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் இலவசமாக வழங்கும் திட்டம் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் தங்களின்அடையாள அட்டை, ஆதாா் அட்டை, தையல் தொழில் பயிற்சி சான்றிதழுடன் இணைய வழியிலோ அல்லது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேரில் வந்தோ விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே விண்ணப்பித்தவா்கள் 8438736944 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்து, தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே தோ்வில் பங்கேற்றவா்கள் இந்த எண்ணைத் தொடா்பு கொண்டு, தோ்வு பெற்றுள்ள விவரம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பம் செய்பவா்களுக்கு விரைவில் தோ்வு நடத்தி, தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படவுள்ளதால், தகுதியான மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை (ஜன. 3) மாலை 5 மணிக்குள் இணைய வழியிலோ அல்லது மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் நேரிலோ விண்ணப்பிக்கலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.