பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் அளிப்பு
புதுச்சேரி, மணவெளி தொகுதிக்குள்ளபட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மரக்கன்றுகளை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றச்சூழல் துறை சாா்பில், மாநில மக்களின் பங்களிப்புடன் அடுத்த 5 ஆண்டுகளில் பசுமைப் பரப்பை இரட்டிப்பாக்கும் செயல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, வீடுகளில் மரம் வளா்த்தல், நகா்ப்புறத் தோட்டம், கிராமப்புற காடு வளா்ப்பு, பசுமை வளாகம் போன்ற திட்டங்களில் நிகழாண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த நிலையில், ‘ஒரு வீடு , ஒரு மரம்’ திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதிக்குள்பட்ட பூரணாங்குபத்தில் உள்ள வீடுகளுக்கு மா,எலுமிச்சை, மாதுளை, பலா, கொய்யா உள்ளிட்ட 500 பழ மரக்கன்றுகளை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வழங்கினாா்.
அப்போது, புதுவை மாசுக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் ராஜேஷ், இளநிலை ஆய்வக உதவியாளா் இளங்கோ, திட்ட அலுவலா்கள் சாந்தலட்சுமி, விமல்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.