மத்திய அரசைக் கண்டித்து விழுப்புரத்தில் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்கள், மத்தியத் தொழிற்சங்கங்கள், விவசாயச் சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம், மறியல் வியாழக்கிழமை நடைபெற்றது.
தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காப்பீட்டுத் துறையில் 100% அந்திய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் 3, 4 -ஆம் நிலைகளில் புதிய பணி நியமனங்களை மேற்கொள்ள வலியுறுத்தியும், விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக் கோரியும், அனைத்து விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரியும் நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தம் மத்தியத் தொழிற்சங்கங்கள் சார்பில் வியாழக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, விழுப்புரம் கிழக்குப் பாண்டி சாலையிலுள்ள ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகம் ஊழியர்கள், அலுவலர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. முன்னதாக அலுவலகம் முன்பு அலுவலர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதுபோல விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் மத்தியத் தொழிற்சங்கங்கள் சார்பிலும், நான்கு முனை சந்திப்பு அருகே விவசாயச் சங்கங்கள் சார்பிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
பொது வேலை நிறுத்தம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. வாகனங்கள் வழக்கம் போல இயங்கின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.