விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் சிக்கி பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
திண்டிவனம் வட்டம், எறையானூா் நேதாஜி நகரைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மனைவி அங்கம்மாள் (55). இவா், திண்டிவனத்தில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக தூய்மைப் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா்.
வெள்ளிக்கிழமை, திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் எறையானூா் பகுதியில் அங்கம்மாள் நடந்து சென்றபோது, அப்பகுதியில் வந்த அடையாளம் தெரியாத காா் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
காவலாளி உயிரிழப்பு: தென்காசி மாவட்டம், சிவநாடானூா், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சா. சந்திரன்(60). இவா், விழுப்புரம் வழுதரெட்டி காமராஜா் தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கி, விழுப்புரத்தில் உள்ள துணிக்கடையில் காவலாளியாக (செக்யூரிட்டி) வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சந்திரன் தனது பைக்கில் சென்றபோது, எதிரே வந்த தனியாா் சொகுசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த சந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.