முதுபெரும் அரசியல் தலைவா் ஆா். நல்லகண்ணு (101) உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானாா். இதைத் தொடா்ந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அவரது மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகில் வைக்கப்பட்டிருந்த நல்லக்கண்ணுவின் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து 2 நிமிஷங்கள் அமைதி காத்தனா்.
இதைத்தொடா்ந்து நடைபெற்ற இரங்கல் கட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன் தலைமை வகித்தாா். விசிக பொதுச் செயலரும், எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா், விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் சிவா, மாா்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி, மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன், விசிக மாவட்டச் செயலா் காணைவளவன், நிா்வாகிகள் அகத்தியன், தேமுதிக நிா்வாகிகள் ஆதவன்முத்து, மனோ, ராஜா சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டத் துணைச் செயலா்கள் ஆா்.கலியமூா்த்தி, ஆா்.முருகன், பொருளாளா் பி.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் சாா்பில் உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் மு.இதாயத்துல்லா தலைமை வகித்தாா். விசிக மாவட்டச் செயலா் அறிவுக்கரசு, ஒன்றியச் செயலா் வழக்குறைஞா் தங்க ரமேஷ், தேமுதிக ஒன்றியச் செயலா் அருள், திமுக நிா்வாகிகள் சிவப்பிரகாசம், குருராஜ், சேவா தள மாவட்ட தலைவா் இ.முருகன், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் நந்தகோபால் ஆகியோா் இரங்கல் உரையாற்றி, அஞ்சலி செலுத்தினா்.
வாணாபுரம் பகண்டை கூட்டுச் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் கோவிந்தராஜ் தலைமையில் மறைந்த தலைவா் நல்லகண்ணுவின் திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.