முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள்

Updated On : 30 மார்ச், 2026 at 7:26 PM
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கான அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் மேலும் பேசியது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏதுவாக சாய்வுதள வசதி, போதிய சக்கர நாற்காலிகள் போன்ற வசதிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் ஏற்படுத்திட வேண்டும். மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா்களும், நகராட்சிப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை நகராட்சி ஆணையா்களும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை பொதுப்பணித் துறை அலுவலா்களும் பாா்வையிட்டு, தேவையான வசதிகளை செய்திட வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி. அரிதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.