ரூ.500 கோடிக்கு கூட்டணி பேரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்: அன்புமணி
தேமுதிகவுடன் திமுக ரூ.500 கோடிக்கு கூட்டணி பேரம் நடத்தியதாக வைகோ கூறியுள்ளது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப் போவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
தேமுதிகவுடன் திமுக ரூ.500 கோடிக்கு கூட்டணி பேரம் நடத்தியதாக வைகோ கூறியுள்ளது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப் போவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
இந்த விவாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பாமகவின் இளைஞர் சங்க நிர்வாகிகள் கூட்டம் தியாகராய நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி பேசியது: கூட்டணிக்காக திமுக எல்லோரிடமும் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. கூட்டணிக்கு யாரும் வராததால் பல்வேறு அமைப்பு ஆதரவு தெரிவிப்பதாகக் காட்டுகிறது. இதில் ஒன்றிரண்டு அமைப்புகளைத் தவிர, மற்ற அமைப்புகள் எல்லாம் இருக்கிறதா என்றே தெரியவில்லை.
இங்கு யாரும் ஆதரவு தெரிவிக்காததாதல் ஜார்க்கண்ட், பீகாரில் இருந்து எல்லாம் ஆள்களை திமுக அழைத்து வரும் என்று நினைக்கிறேன். இப்போது காங்கிரஸ் கூட, திமுகவுடன் ஏன் கூட்டணி அமைத்தோம் என்று நினைக்கிறது. அதிமுகவின் நிலை இதைவிட மோசம். சில மாதங்களுக்கு முன்பு கண்ணுக்கு எட்டி தூரம் வரை எதிரிகளே இல்லை என்றது.
தற்போது கூட்டணிக்கு எல்லோரிடம் பேசிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி. பெயரிலேயே குழப்பம். முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தது நன்றாக போய்விட்டது. பாமகவின் வெற்றி எளிதாகிவிட்டது என்றார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:-
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியால் பாமகவின் வெற்றி வாய்ப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படாது. பாமகவின் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். கூட்டணி அமைப்பதற்காக ரூ.500 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாக ஒரு கட்சியின் தலைவரே (வைகோ) கூறியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க உள்ளோம். தேர்தல் ஆணையம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.