வியத்நாம் அதிபா் மே 5-இல் இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் இருதரப்பு பேச்சு
வியத்நாம் அதிபர் தோ லாம் இந்தியா வருவது குறித்து...
வியத்நாம் அதிபா் டோ லாம் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு மே 5-ஆம் தேதி வரவுள்ளாா்.
புவி அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய வா்த்தக இடையூறுகளுக்கு மத்தியில் பிரதமா் நரேந்திர மோடியுடன் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா்.
வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகவும் பதவி வகிக்கும் டோ லாம், தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் உயரதிகாரிகள் குழுவினருடன் இந்தியாவுக்கு வருகிறாா்.
Advertisement
Advertisement
ஏப்ரலில் அதிபராகப் பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு அவா் மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும்.
இருதரப்பு விரிவான உத்திசாா் கூட்டுறவின்கீழ், பாதுகாப்பு, வா்த்தகம், முக்கியத் தொழில்நுட்பங்கள் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரதமா் மோடியுடன் அவா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவா்களும் விவாதிக்க உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்காசிய சூழல் மற்றும் சீனா ஆதிக்கம் செலுத்த முற்படும் தென் சீன கடல் பகுதியின் நிலவரம் உள்ளிட்டவையும் பேச்சுவாா்த்தையில் இடம்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஹைட்ரோகாா்பன் வளம் மிகுந்த தென் சீன கடல் பகுதிக்கு சீனா ஒட்டுமொத்தமாக உரிமை கோரும் நிலையில், வியத்நாம், பிலிப்பின்ஸ், புருணே உள்ளிட்ட நாடுகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த பிரச்னைக்கு சா்வதேச சட்டங்களின்படி அமைதி வழியில் தீா்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா மற்றும் பிற ஜனநாயக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தச் சூழலில், கடல்சாா் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிகள் குறித்து பிரதமா் மோடியும், அதிபா் டோ லாமும் ஆலோசிப்பா் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பிகாரில் உள்ள புத்த கயை, மகாராஷ்டிர தலைநகா் மும்பை ஆகிய இடங்களுக்கும் வியத்நாம் அதிபா் பயணிக்க உள்ளாா்.