மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!
வியத்நாம் அதிபர் தோ லாம் இந்தியா வருவது குறித்து...
வியத்நாம் அதிபர் தோ லாம் அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியத்நாமின் அதிபரும், அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான தோ லாம் வரும் மே 5 ஆம் தேதி அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார்.
மேலும், வரும் மே 7 வரையிலான 3 நாள் பயணத்தில் அவருடன் வியத்நாமின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, வியத்நாம் அதிபர் லாமுக்கு தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மே 6 ஆம் தேதி மத்திய அரசின் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பயணத்தில், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து உரையாடும் அதிபர் லாம், இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்கிறார்.
இத்துடன், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருதரப்புக்கும் இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனக் கூறப்படுகிறது.
ஹைட்ரோ கார்பன் கனிமங்கள் அதிக அளவில் கிடைக்கும் தெற்கு சீன கடல்பகுதியை, உரிமைக் கொண்டாடும் விதத்தில் சீன ராணுவம் தொடர்ந்து அப்பகுதியில் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இது, அந்தக் கடல்பகுதியில் அமைந்துள்ள வியத்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து அமைதியான முறையில் தீர்வுக்காண வேண்டுமென இந்தியா உள்ளிட்ட ஜனநாயக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனவே, வியத்நாம் அதிபரின் இந்திய பயணத்தில் இதுபற்றிய முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.