முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு நிரந்தர வேலை எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடக்கும்..? ஏதும் தோஷம் உள்ளதா..? என்ன பரிகாரம் செய்யவேண்டும்..? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்..?

என் மகனுக்கு நிரந்தர வேலை எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடக்கும்..? ஏதும் தோஷம் உள்ளதா..? என்ன பரிகாரம் செய்யவேண்டும்..? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்..?

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

என் மகனுக்கு நிரந்தர வேலை எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடக்கும்..? ஏதும் தோஷம் உள்ளதா..? என்ன பரிகாரம் செய்யவேண்டும்..? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்..?

-வாசகர், சிவகங்கை மாவட்டம். 

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம். லக்னம், சுக ஸ்தானம் ஆகிய நான்காம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் ராகு பகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியில் நீச்சமடைகிறார். 

Advertisement

குரு பகவானின் ஐந்தாம் பார்வை லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை லக்னத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சூரிய (சிவராஜயோகம்) பகவான் மீதும், புத, சனி பகவான்களின் மீதும், ஒன்பதாம் பார்வை தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டின் மீதும் படிகிறது. 

பொதுவாக குரு பகவான் புத பகவானின் வீடான மிதுன ராசியில் இருந்தால், அநேக நண்பர்களின் ஆதரவும், அன்பும் கிடைக்கும். 

தன தான்ய சேர்க்கை, உற்றார் உறவினர்களுடன் இணக்கம் போன்றவை உண்டாகும். குறிப்பாக மாமன் வழி ஆதரவு கிடைக்கும். புத பகவானுக்கு "மாதுல காரகர்' என்ற பெயர் உண்டு (மாதுல வர்க்கம் என்றால் "மாமன் வகையறாக்கள்'). குரு பகவான் ஏழாம் வீட்டில் இருந்தால் மனைவியால் சொத்து சுகமும், திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையில் முன்னேற்றம், புத்திகூர்மை, நல்ல பெயர், விவசாயப் பொருட்களால் லாபம் ஆகியவை உண்டாகும். 

பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் பன்னிரண்டாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றமர்ந்து, சந்திர பகவானுக்கு நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுத்து, பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகத்தைப் பெறுகிறார். 

ருசக யோகத்தால் சிறப்பான உடலாரோக்கியம், பூமி லாபம், உடல் உழைப்பினால் பொருளாதார மேன்மை, உடன் பிறந்தோரின் ஆதரவு, துணிந்து செய்யும் செயல்களில் சாதனை, அரசாங்க அதிகாரி, நெருப்பு, சமையல், மின்சாரம் சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபட்டு வெற்றி பெறுதல் ஆகியவை உண்டாகும். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் லக்னத்தில் கேது பகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார்.

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் லக்னத்தில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியில் உச்சமடைகிறார். 

சனி பகவான் தனுசு ராசியில் 21-ஆம் பாகையில் இருக்கிறார். இது "புஷ்கராம்சம்' ஆகும். இந்த பாகையில் சஞ்சரிக்கும் கிரகங்கள் உன்னத பலம் பெறும். இந்த ராசிகளின் பாகைகளை வாசகர்களின் புரிதலுக்காக கீழே கொடுத்திருக்கிறோம்:

மேஷம், சிம்மம், தனுசு ---       பாகை 21 
ரிஷபம், கன்னி, மகரம் ---       பாகை 14 
மிதுனம், துலாம், கும்பம் ---   பாகை 24 
கடகம், விருச்சிகம், மீனம் ---  பாகை 7 

-இவைகள் புஷ்கராம்சமாகும். இவைகளில் ஒரு பாகை முன்பாகவோ, பின்பாகவோ இருக்கலாம். 

ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோணம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். 

களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் தனுசு ராசியில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். 

புத பகவான் வலுத்தவர்களுக்கு வாக்கு சாதுரியம், வித்தை, புராணங்களில் ஆழ்ந்த அறிவு, கவிதை, காவியங்களில் ஆர்வம், கணக்கில் இயற்கையான அறிவு, மத்தியஸ்தம் செய்வதில் திறமை ஆகியவை இயற்கையாகவே அமையும். 

அஷ்டமாதிபதி சந்திர பகவான் அயன ஸ்தானத்தில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்) விபரீத ராஜயோகம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். சந்திர பகவானுக்கு அஷ்டமாதிபத்ய தோஷம் உண்டாகாது என்பது ஜோதிட விதி. 

ராகு பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். 

கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் புத பகவானின் சாரத்தில் (ஆயில்யம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். 

தற்சமயம் புத மஹா தசையில் சனி பகவானின் புக்தி இன்னும் இரண்டாண்டுகள் நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் நிரந்தர வேலை திருமணம் ஆகியவை நிறைவேறும்.

பன்னிரண்டாமிடம் சுப பலம் பெற்றுள்ளதால் பெரிய அனாவசியச் செலவுகள் என்று எதுவும் ஏற்படாது. எதிர்காலம் சிறப்பாகவே அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானையும், சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments