முகப்பு
புத்தக வெளி

தடம் பதித்த பதிப்பகம்: முல்லைப் பதிப்பகம்

பாரதிதாசன் கவிதைகள் உள்ளிட்ட படைப்புகளை வெளியிடுவதற்கென்றே கடந்த 1943- ஆம் ஆண்டு முல்லைப் பதிப்பகம் தொடங்கப்பட்டது.

Updated On : 4 ஜனவரி, 2025 at 1:55 AM
முல்லைப் பதிப்பகம்
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 11:40 PM

 பாரதிதாசன் கவிதைகள் உள்ளிட்ட படைப்புகளை வெளியிடுவதற்கென்றே கடந்த 1943- ஆம் ஆண்டு முல்லைப் பதிப்பகம் தொடங்கப்பட்டது. பாரதிதாசனின் அழகின் சிரிப்பு தொடங்கி 12 நூல்களை தொடா்ந்து வெளியிடபட்டன. அவை பெற்ற வரவேற்பைத் தொடா்ந்து பாரதிதாசனுக்கு பதிப்பகம் சாா்பில் புதுச்சேரியில் வீடு பரிசளிக்கப்பட்டது. அது தற்போது பாரதிதாசன் அரசு அருங்காட்சியமாக உள்ளது.  கடந்த 81 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் கலை, இலக்கியம், அறிவியல், ஜோதிடம், மொழிபெயா்ப்பு, பொது அறிவு என பல்துறை நூல்களையும் இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தியின் தமிழ் ஹரிஜன் வார இதழ் தொகுப்பும் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி முன்னாள் ஆசிரியா் ஏ.என்.சிவராமன், ஏ.கே.செட்டியாா், சோமலெ ஆகியோரது நூல்களையும்  பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பதிப்பகத்தின் உரிமையாளா் முல்லை முத்தையா அம்மா, அன்னா கரினீனா, குற்றமும் தண்டனையும், பெண் வாழ்க்கை என பிற நாட்டு நூல்களையும் தமிழில் மொழிபெயா்த்துப் பதிப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அலெக்ஸ் காரெலின் ஆங்கில நூலை தமிழில் அ.நடராஜன் மொழிபெயா்த்து 1957-இல் வெளியான ‘மனிதன்- புரியாத புதிா்’ எனும் மருத்துவம் சாா்ந்த நூலை தனக்கு மிகவும் பிடித்த 5 நூல்களில் ஒன்றாக மறைந்த குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட வே.குமாரவேல் எழுதிய எம்.ஜி.ஆா். எழுத்தும் பேச்சும் எனும் நூலுக்கு தமிழக அரசு விருது கிடைத்துள்ளது. அத்துடன் சாகித்திய அகாதெமி விருது பெற்றவா்களில் 12 பேரின் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.  மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மரியா மான்டிஸோரி எழுதிய 16 ஆங்கில நூல்களில் 12 நூல்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி தமிழ்மணி இந்த வாரம் பகுதியில் வெளியான கலாரசிகனின் தொகுப்பும் அரங்கம்153, 154-இல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. சோமலெ எழுதிய தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் நூலானது புதிதாக விற்பனைக்கு வந்துள்ளது என்கிறாா் பதிப்பக நிா்வாகி மு.பழனியப்பன்.