முகப்பு
பிரபலங்கள் - புத்தகங்கள்

'அருணாசல மகிமை': சொல்லிக்கொண்டே போகலாம்! -பி.ஆர்.குமார்

’அருணாசல மகிமை’ என்ற தலைப்பில் ஸ்ரீ பரணீதரன் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆனந்தவிகடன் வார இதழில் ஒரு தொடர் கட்டுரை எழுதினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
அருணாசல மகிமை / பரணீதரன்
பகிர்:

’அருணாசல மகிமை’ என்ற தலைப்பில் ஸ்ரீ பரணீதரன் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆனந்தவிகடன் வார இதழில் ஒரு தொடர் கட்டுரை எழுதினார். மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர் அது. வேகம், விறுவிறுப்பு ஆகியவற்றை அக்கட்டுரைத் தொடர் கொண்டிருந்தாலும் படிப்பவர்கள் மனங்களில் அசைக்கமுடியாத அமைதியை அக்கட்டுரைத் தொடர் ஏற்படுத்தியது.

அதற்கு மிக முக்கியக் காரணம் அக்கட்டுரைத் தொடரில் திருவண்ணாமலையின் தல வரலாறு மட்டுமின்றி அங்கு வந்து பல ஆண்டுகள் தங்கியிருந்து பின்னர் முக்தி அடைந்த மகான்கள் பற்றிய செய்திகள் விவரமாக பரணீதரன் எழுத்துகள் மூலமாக வெளிப்பட்டிருந்தன.

பின்னாளில் அக்கட்டுரை எல்லாம் தொகுத்துக் கலைஞன் பதிப்பகம் இரண்டு பாகங்களாக ’அருணாசல மகிமை’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டது. என் போன்றோர்க்கெல்லாம் அந்த இரண்டு பாகங்கள் கொண்ட நூல் கையோடு பாதுகப்புடன் வைத்திருந்து அவ்வப்போது படித்து இன்புறுவதற்கு மிக அத்யாவசியமான ஒன்றாகும்.

Advertisement

இப்படி நான் கூறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. திருவண்ணாமலை பற்றியும் அந்த ஊரில் வாழ்ந்த மற்றும் அருகாமையில் உள்ள ஊர்களில் தோன்றி மறைந்த பல மகான்களைப் பற்றிய செய்திகள் மிகுந்த சொல்நயத்தோடும், பொருள் நயத்தோடும் கூறப்பட்டிருந்த பாங்குமெய்மறக்கச் செய்ததாகும்.

பொதுவாக ஒரு நூலை எடுத்துக் கொண்டால் ஒரு சில செய்திகளே நமக்குக் கிடைக்கும். ஆனால் அருணாசல மகிமையில் தொடர்ச்சியாகச் சங்கிலி வடிவில் பல்வேறு செய்திகள் தரப்பட்டுள்ளன. இதற்கு முக்கியக் காரணம் ஸ்ரீ பரணீதரன் இந்த நூலை இருந்த இடத்தில் இருந்தபடியே ஒரு தொகுப்பு நூலாக அமைக்கவில்லை.

ஒவ்வொரு செய்திக்கும், அவர் பலமுறை ஒவ்வொரு இடத்திற்கு சென்று பார்த்துக் கேட்டு எழுதியிருக்கிறார். ஆகையினால் அவர் சொல்கின்ற செய்திகள் அனைத்தும் நேர்முகச் செய்திகள். இதற்கு மேலாக அவர் பார்த்து, கேட்டு அறிந்த செய்திகள் அனைத்தையும் காஞ்சி ஸ்ரீ மகாபெரியவர்களிடம் சமர்ப்பித்து அவருடைய ஆய்வுக்குப் பின்னரே வெளியிட்டிருக்கிறார். ஆகையினால் நாம் பெறுகிற தகவல்கள் முற்றிலும் உண்மையானவை, முழுமையானவை.

இந்த நூலில் இன்னொரு பெரிய சிறப்பு என்னவென்றால் திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்த மகான்கள் நம்முடனே நேரடியாகப் பேசுவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார். பரணீதரன். இந்நூலில் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி நம்மோடு பேசுவார். மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் நம்மோடு பேசுவார். ஸ்ரீ பூண்டி மகான் குரல் ஓங்கி ஒலிக்கும். அண்மையில் மறைந்த சாதுராம் ஸ்வாமிகள் பற்றிய வரலாறும் இந்நூலில் உண்டு. வெளிநாட்டவரான பால் பிரண்டனின் திருவண்ணாமலை அனுபவங்களை நேரடியாகக் காணலாம்.

இந்நூலில்  மிகச் சிறப்பான பகுதி பரணீதரனின் பருவத மலைப் பயணமாகும். நம்மையே அந்தப் பயணத்தில் உடன் அழைத்துச் செல்வார். மலைகளில் ஏறிச்செல்லும் போது பரணீதரன் தருகின்ற வர்ணனைகள் நம்மைப் புல்லரிக்க வைக்கும். ஏழை எளிய மக்கள் பருவத மலையில் ஏறி வரும்போது அவர்கள் பேசுகின்ற சொற்றொடர்களை அப்படியே வழங்கியிருக்கிறார். பயணத்தில் நிறைய திருப்பங்கள் உண்டு.

பருவதமலைக்குச் செல்வதற்கு முன் பரணீதரன் பூண்டி மகானிடம் அனுமதி கேட்டு இருக்கிறார். அப்போது பூண்டி மகான் ஆக்கமும் ஊக்கமும் இருந்தால் எல்லாம் நடக்கும். நல்லபடியாகப் போய் வருவீர்கள் என்று கூறியிருக்கிறார்.

பரணீதரனும் அவருடைய குழுவினரும் உதவியாளர்களுடன் மலையேறிச் செல்லும்போது பலவிதமான இன்னல்களுக்கு உள்ளாகிப்  பருவதமலை உச்சிக்குச் சென்றடைகிறார்கள். அப்போதே பிற்பகல் வந்துவிட்டது. வந்த களைப்பு தாங்காமல் எல்லோரும் ஓய்வு எடுத்துக் கொள்கிறார்கள். அப்போது கூட வந்த உதவியாளர் ஒருவர், ‘’இங்கு இரவு தங்கவேண்டுமானால் அதற்காக நாம் பல முன்னேற்பாடுகளுடன் வந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இப்போதே மலையிலிருந்து இறங்கிச் சென்றுவிட வேண்டும் என்று கூறுகிறார்.

இதைக் கேட்ட பரணீதரனுக்கு தூக்கி வாரிப்போடுகிறது. உடனே முடிவெடுத்து அனைவரும் மலையிலிருந்து கீழே இறங்கிவிடுகிறார்கள். இது அவர்களுக்கு ஓர் ஏமாற்றம்தான். இருப்பினும் மலையேறி வந்த வரைக்கும் இரு பெரிய சாதனைதான் என்று தங்களைத்  தாங்களே சமாதானம் செய்து கொள்கிறார்கள். இந்தக் கட்டங்களை பரணீதரன் வெகு அழகாக விவரித்திருக்கிறார். மீண்டும் மீண்டும் படித்து இன்புற வேண்டிய பகுதி இது.

இதைப் போலவே பூண்டி மகானைச் சந்தித்து உரையாடிய பகுதிகள் எப்போது பார்த்தாலும் புதுமையாக இருக்கும். குறிப்பாக ஒருவர் சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்டத் தொகையை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் துயரம் இல்லாமல் வாழ முடியும் என்பதை ப்ண்டி மகான் அவருக்கே உரிய நடையில் கூறியிருக்கிறார்.

இப்படி அருணாசல மகிமை நூல் பற்றிய செய்திகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு முறை படித்தால் மீண்டும் மீண்டும்  படிக்கத் தோன்றும். அப்படி எழுதியிருக்கிறார் பரணீதரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments