வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 6.33 லட்சம் விவசாயிகளுக்கு வேளாண் தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளதாவது:
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை எட்ட வேளாண் துறை சார்ந்த பல்வேறு பிரிவுகளில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.
அதன்படி, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் உள்ளிட்ட பிரிவுகளில் விவசாயிகளுக்கு பயிற்சிகளை வழங்க முடிவு செய்துள்ளோம்.
வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 6.33 லட்சம் விவசாயிகளுக்கு இத்தகைய பயிற்சிகளை வழங்கி அவர்களை மேம்படுத்துவதே வேளாண் அமைச்சகத்தின் இலக்கு. இதற்கு, கடந்த 2016-17-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.3.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகங்கள் இணைந்து இம்மாதம் முதல் விவசாயிகளுக்கு பயிற்சிகளை தொடங்க உள்ளது என்றார் அவர்.
வேளாண் கடன் அதிகரிப்பு: வங்கிகள் வேளாண் துறைக்கு வழங்கிய கடன் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 12.1 சதவீதமாக அதிகரித்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முதல் காலாண்டில் இந்த கடன் வளர்ச்சி 11.9 சதவீதமாக காணப்பட்டது.
மேலும், வீட்டு வசதி கடன் 10.4 சதவீதத்திலிருந்து 10.6 சதவீதமாகவும், வாகன வசதி கடன் 2 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதமாகவும் அதிகரித்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.