பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) அதன் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனை (சிபிசிஎல்) தன்னுடன் இணைத்துக் கொள்ளும் திட்டத்தை கைவிட்டுள்ளது.
இதுகுறித்து ஐஓசி நிறுவனத்தின் உயரதிகாரி கூறியதாவது:
சிபிசிஎல் நிறுவனத்தில் ஐஓசி 51.89 சதவீத பங்குகளை வைத்துள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தனது துணை நிறுவனமான போங்காய்கான் ரிபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல் (பிஆர்பிஎல்) நிறுவனத்தை இணைத்துக் கொண்டதைப் போல, சிபிசிஎல் நிறுவனத்தையும் தன்னுடன் இணைக்க ஐஓசி திட்டமிட்டது.
ஆனால், பிஆர்பிஎல் நிறுவனத்தைப் போலல்லாமல், சிபிசிஎல் நிறுவனத்தில் நேஷனல் ஈரானியன் ஆயில் கார்ப்பரேஷன் (என்ஐஓசி)15.40 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
சிபிசிஎல் நிறுவனம் ஐஓசியுடன் இணைக்கப்படும் நிலையில், சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்க திட்டங்களில் என்ஐஓசி முதலீடு மேற்கொள்ளாது என்பது ஐஓசியின் நம்பிக்கை. மேலும், சிபிசிஎல் நிறுவனத்தை விட்டு என்ஐஓசி வெளியேறவும் வாய்ப்பு ஏற்படும்.
ஏற்கெனவே சிபிசிஎல் நிறுவனத்தின் ஆண்டுக்கு 90 லட்சம் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ரூ.27,460 கோடி மதிப்பிலான விரிவாக்க திட்டத்தில் என்ஐஓசியும் பங்கேற்க முடிவெடுத்துள்ளது.
இந்த நிலையில் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றினால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். சிபிசிஎல் நிறுவனத்தில் ஈரானிய நிறுவனம் தொடர்ந்து முதலீட்டை தக்கவைக்கவே விரும்புகிறது.
இதையடுத்தே, இந்த இணைப்புத் திட்டத்தை ஐஓசி நிறுவனம் கைவிட முடிவு செய்துள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.