வீட்டு வசதிக்கு நிதி உதவி அளித்து வரும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு காலத்தில் ரூ.127.5 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தைகளுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த அரையாண்டு காலத்தில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் ரூ.1,592 கோடி அளவுக்கு கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது 15 சதவீத வளர்ச்சியாகும். இதில், ரூ.1,480.5 கோடி வரையிலான கடன் வழங்கப்பட்டுவிட்டது. இது, 14 சதவீத வளர்ச்சியாகும்.
நிகர வட்டி வருமானம் 2 சதவீதம் அதிகரித்து ரூ.225.8 கோடியாக இருந்தது. நிகர லாபம் 1 சதவீதம் உயர்ந்து ரூ.127.5 கோடியாக காணப்பட்டது.
செப்டம்பர் இறுதி நிலவரப்படி நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் வர்த்தகம் 11 சதவீதம் உயர்ந்து ரூ.10,382 கோடியைத் தொட்டுள்ளது. மேலும், மொத்த வாராக் கடன் விகிதம் 3.6 சதவீதமாக உள்ளது என ரெப்கோ ஹோம் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்துக்கு நாடு தழுவிய அளவில் 141 கிளைகளும், 24 துணை கிளைகளும் உள்ளன.