நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்காம்) நிறுவனம் இனி தொலைத் தொடர்பு வர்த்தகத்திலிருந்து விலகி எதிர்காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் முழு கவனத்தையும் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 14-ஆவது ஆண்டு பொதுக் குழு கூட்டம் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு அந்நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி பேசியதாவது:
கடந்த 2000-ஆம் ஆண்டின் முற்பகுதியில், நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் தொலைத்தொடர்பு சேவையை கொண்டு சேர்ப்பதற்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முதன்மையான முக்கியத்துவத்தை கொடுத்து வந்தது. இதற்காக, மிகவும் மலிவான விலையில் சலுகைகள் வாரி வழங்கப்பட்டதையடுத்து தற்போது நிறுவனம் ரூ.40,000 கோடி கடனை தீர்க்க வேண்டிய நிலையில் உள்ளது.
எனவே, இனியும் தொலைத்தொடர்பு துறையில் நீடிப்பதில்லை என்று ஒரு மனதாக முடிவு செய்துள்ளோம். இந்த நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கும் ரியல் எஸ்டேட் துறையில் முழு கவனத்தையும் செலுத்தவுள்ளோம் என்றார் அவர்.