தமிழக ஆலையிலிருந்து அடுத்தாண்டு முதல் கீபோர்ட் உள்ளிட்ட இசைக் கருவிகளை தயாரிக்க உள்ளதாக யமஹா மியூசிக் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டகாஷி ஹகான் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் அமைக்கப்படும் இசைக் கருவி உற்பத்தி ஆலை இருகட்டங்களாக நிறைவேற்றப்படவுள்ளது. முதல் கட்ட கட்டுமானப் பணிகளுக்காக யமஹா மியூசிக் நிறுவனம் 380 மில்லியன் சிங்கப்பூர் டாலரை முதலீடு செய்துள்ளது. ஒட்டு மொத்த அளவில் இருகட்டங்களில் நிறைவேற்றப்படும் ஆலைக்காக நிறுவனம் மொத்தம் 720 மில்லியன் சிங்கப்பூர் டாலரை முதலீடு செய்யவுள்ளது.
தமிழகத்தில் அமைக்கப்படும் ஆலையில் இசைக் கருவிகள் உற்பத்தி அடுத்தாண்டு முதல் தொடங்கவுள்ளது. வரும் ஆண்டுகளில் 4 லட்சம் கிட்டார் மற்றும் 3 லட்சம் கீபோர்டுகள் தயாரிக்கும் வகையில் இந்த ஆலை உருவாக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டு உற்பத்தியில் 20-30 சதவீத இசைக் கருவிகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.
மேலும், நாடு முழுவதிலும் உள்ள தனியார் பள்ளிகளின் ஒத்துழைப்புடன் இசைப் பள்ளியையும் யமஹா மியூசிக் தொடங்கியுள்ளது என்றார் அவர்.