நாட்டின் சில்லறைப் பணவீக்கம் சென்ற ஜூன் மாதத்தில் 3.18 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் நடப்பாண்டு ஜூன் மாதத்தில் 3.18 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவுப் பொருள்களின் விலை உயர்வே இதற்கு முக்கிய காரணம்.
இப்பணவீக்கம் முந்தைய மே மாதத்தில் 3.05 சதவீதமாகவும், கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 4.92 சதவீதமாகவும் காணப்பட்டது.
மே மாதத்தில் 1.83 சதவீதமாக இருந்த உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஜூன் மாதத்தில் 2.17 சதவீதமாக அதிகரித்தது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றின் விலை ஜூன் மாதத்தில் அதிகரித்தது.
அதேசமயம், காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை குறைவாக காணப்பட்டது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருமாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும் நிதிக் கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி, சில்லறைப் பணவீக்கத்தை முக்கிய காரணியாக கருத்தில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.