பிரிட்டனைச் சேர்ந்த டிரையம்ப் நிறுவனம் " டைகர் 800 எக்ஸ்சிஏ' என்ற புதிய மோட்டார்சைக்கிளை இந்தியச் சந்தையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.15.17 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியாவின் பொது மேலாளர் ஷோயிப் ஃபரூக் கூறியதாவது:
புதிய மேம்படுத்தப்பட்ட வடிவில் வெளிவந்துள்ள டைகர் மோட்டார்சைக்கிளில் 800சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உச்சகட்ட ஆற்றல் வெளிப்பாடு 95பிஎஸ் ஆகும். ஆறுவிதமான முறைகளில் இயங்கக்கூடிய இந்த மோட்டார்சைக்கிள் இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வகையான 1,000 மோட்டார்சைக்கிள்கள் ஏற்கெனவே விற்பனையாகி இந்திய சாலைகளில் வலம் வந்து கொண்டுள்ளன. பிரீமியம் சாகச மோட்டார்சைக்கிள் பிரிவில் இந்தியாவில் டிரையம்ப் நிறுவனத்தின் டைகர் சந்தேகத்துக்கிடமில்லாமல் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
பல ஆண்டு நீண்ட நெடிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு பிறகு இப்புதிய டைகர் 800 பைக் உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.