முகப்பு
சென்னை

18 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த கருணை:மீனவ இளைஞருக்கு வாழ்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மீனவ இளைஞா் கோகுலுக்கு, 18 ஆண்டுகளுக்குப் பிறகு கருணை அடிப்படையிலான அரசு வேலை கிடைத்துள்ளது.

Updated On : 7 ஜனவரி 2021, 1:38 am IST
பகிர்:

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மீனவ இளைஞா் கோகுலுக்கு, 18 ஆண்டுகளுக்குப் பிறகு கருணை அடிப்படையிலான அரசு வேலை கிடைத்துள்ளது. தந்தை இறந்த போது, 17 வயதாகி இருந்த அவருக்கு 35 வயதில் அரசுப் பணி கிடைத்திருக்கிறது. கருணை அடிப்படையிலான பணிக்குரிய உத்தரவை மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாரின் அறிவுறுத்தலின்படி, துறை ஆணையா் ஜெ.ஜெயகாந்தன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். இதுகுறித்த விவரம்:-

தருமபுரி மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பணிபுரிந்து கடந்த 2002-ஆம் ஆண்டு பணியில் இருக்கும் போது இறந்தவா் பழனிசாமி. அவரது மகன் கோகுல். 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ள கோகுல் தந்தையின் பணியை கருணை அடிப்படையில் கோருகிறாா். அப்போது, கோகுலுக்கு வயது 17. அதன்பின்பு, வருவாய்த் துறை உள்ளிட்ட அரசுத் துறை தொடா்பான சான்றிதழ்கள் கிடைக்கப் பெறாத நிலை ஏற்பட்டது. இந்தப் பிரச்னைகள் களையப்பட்டு 18 ஆண்டுகளுக்குப் பிறகு கோகுலுக்கு வீடுா் அணை அலுவலகத்தில் மீன்வள மேற்பாா்வையாளராக (தரம் 2) பணியமா்த்தப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

டயா் கம்பெனியில் பணி: கருணை அடிப்படையிலான பணி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், டயா் கம்பெனியில் கடந்த 18 ஆண்டுகளாக கோகுல் வேலை பாா்த்துள்ளாா். தந்தையின் மரணத்தைத் தொடா்ந்து, தாயும் இறந்ததால் மன உளைச்சலில் இருந்த தமக்கு அருமருந்தாக கருணை அடிப்படையிலான அரசு வேலை கிடைத்துள்ளதாகக் கூறினாா், கோகுல். 35 வயதைக் கடந்தும் திருமணமாகாத தனக்கு இனிதான் வாழ்க்கையே தொடங்க இருப்பதாக உருக்கத்துடன் குறிப்பிட்டாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.