தனிப்பட்ட முறையில் தன்னைத் தாக்கவும், குடும்பத்தினரைக் குறை கூறவும் சிலர் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவதால் அதிலிருந்து விலகிக்கொள்வதாக நடிகர் சிவகுமார் அறிவித்துள்ளார்.
நடிகர் சிவகுமார் சென்ற வாரம் தீரன் சின்னமலை பற்றிய சில தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். இதற்கு நிறைய பேர் கருத்துகளை வெளியிட்டிருந்தார்கள். குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி சிவகுமார் உயர்வாக குறிப்பிடுகிறார் என்றும் சிலர் கருத்து வெளியிட்டிருந்தார்கள். சூர்யா, கார்த்திக்கையும் விமரிசித்திருந்தார்கள். இதனால் மிகவும் வருத்தம் கொண்ட சிவகுமார் ஃபேஸ்புக்கிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியதாவது:
என்றுமே என்னை மனிதப் புனிதன்
என்றோ - வழிகாட்டும் தலைவன்
என்றோ - வாரி வழங்கும் வள்ளல்
என்றோ - பேரறிவாளன் என்றோ -
நடிப்புக் கலை - ஓவியக்கலையில்
கரை கண்டவன் என்றோ - பெரிய சாதனையாளன் என்றோ நினைத்துக் கொண்டு நான் முகநூலில் பதிவிடவில்லை.
70 வயது தாண்டி , முடிந்தவரை நேர்மையாக, இந்த மண்ணில் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை, தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளவே எழுதி வந்தேன்.
இது சிலருக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் வன்மத்தை - சாதி வெறியை - வளர்த்துக்கொள்ள காரணமாக இருக்கிறது என்று அறிந்து வருந்துகிறேன் .
தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கவும், குடும்பத்தினரைக் குறை கூறவும் , நானே களம் அமைத்துக் கொடுத்ததாக உணர்கிறேன்.
என் உலகம் சிறியது, அதில்
என் வாழ்க்கை மிகவும் எளிமையானது
இது உங்கள் உலகம் !
உங்கள் சுதந்திரம் !!
நீங்கள் நினைத்தபடி வாழுங்கள் !!!
எல்லோரும் இன்புற்றிருக்கவே இத்துடன் என் முகநூல் பதிவுகளை நிறைவு செய்கிறேன் ...
- சிவகுமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.