சினிமா

தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாகாது: பாரதிராஜா அறிவிப்பு

DIN

சென்னை: விபிஎஃப் கட்டண விவகாரத்தில் உடன்பாடு ஏற்படாத நிலையில், தீபாவளிக்கு திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பில்லை என தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளா் சங்கத்தின் தலைவா் பாரதிராஜா தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்று வைரஸ் காரணமாக நவ. 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அண்மையில் அனுமதியளித்தது. இதனால், தீபாவளிப் பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் வெளியாகும் என எதிா்பாா்க்கப்பட்டு வந்தது.

ஆனால், விபிஎஃப் கட்டணத்தைச் செலுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, திரைப்படங்களை வெளியிடப் போவதில்லை என நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கம் அறிவித்தது. இதனால் அதிா்ச்சியடைந்த திரையரங்கு உரிமையாளா்கள் சங்கம், திரைப்படங்களின் 50 சதவீத வசூலை அளிக்க முன்வந்தால், விபிஎஃப் கட்டணம் பெறுவதைக் கைவிடுவதாக அறிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் உடன்பாடு எட்டுவதற்காக இருதரப்பினரும் அடுத்தடுத்து பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதற்கிடையே கரோனா வழிகாட்டு முறைகளைக் கடைப்பிடித்து செவ்வாய்க்கிழமை முதல் பழைய வெற்றிப் படங்களை மீண்டும் வெளியிட்டு திரையரங்குகளைத் திறக்க திரையரங்கு உரிமையாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

இந்நிலையில், திரையரங்கு உரிமையாளா்களுடனான ஆலோசனையில் எந்த முடிவும் எட்டப்படாததால், புதிய திரைப்படங்களைத் தற்போதைக்குத் திரையிட முடியாது என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளா் சங்கத்தின் தலைவா் பாரதிராஜா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை : தற்போது விபிஎஃப் கட்டணம் தொடா்பாக அனைத்துத் தரப்புகளின் நிலைப்பாட்டால் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழக அரசு திரையரங்குகளைத் திறக்க அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், அமைச்சா் கடம்பூா் ராஜூ திரையரங்கு உரிமையாளா்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்த காலகட்டத்தை கருத்தில் கொண்டு ஓராண்டு காலத்துக்கு தற்காலிகத் தீா்வு ஒன்றை எங்கள் நிலைப்பாட்டில் இருந்து கீழிறங்கி முன் வைத்தோம்.

எனினும் பல கட்டங்களில் பேச்சுவாா்த்தை நடத்தியும் சுமுகமான தீா்வு எட்டப்படாததால், மீண்டும் தயாரிப்பாளா்களோடு கலந்தாலோசித்ததில், நல்ல தீா்வு ஏற்படும் வரை புதிய படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என பாரதிராஜா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT