வாழை திரைப்படத்துக்கு நடிகர் கார்த்தி பாராட்டு!
வாழை திரைப்படத்துக்கு நடிகர் கார்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'வாழை' திரைப்படத்துக்கு நடிகர் கார்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப் படம் நாளை (ஆக.23) திரையரங்குகளில் வெளியாகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தைப் பார்த்த இயக்குநர்கள் மற்றும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் வாழை படம் குறித்து நடிகர் கார்த்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “நம் பால்ய வருடங்களை அனைவராலும் நினைவு கூற முடியும். ஆனால், அதையே ஒரு திரைக்காவியமாய் படைத்து அதில் நம்மை உள்ளிழுத்து நமக்கு மிக நெருக்கமானவராய் ஆகிவிட்டார் மாரி.
சந்தோஷின் இசையையும், தேனி ஈஸ்வரின் காட்சியையும் பயன்படுத்தி வாழ்க்கையின் நிதர்சனத்தையும் வலிகளையும் அழகாய் சொல்லியிருக்கிறார். நடிப்பு என்று எதையும் சொல்லி விட முடியாது அவ்வளவு யதார்த்தம். வாழை பார்த்தபின் இயக்குநர் மாரி செல்வராஜ் மீது பெரும் அன்பு உண்டாகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.