மதுபோதையில் விபத்தா? உண்மை இதுதான்: எதிர்நீச்சல் நாயகி விளக்கம்!
மதுபோதையில் காவலர் மீது வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தியதாக பரவிய செய்தி குறித்து, நடிகை மதுமிதா விளக்கம்.
எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை மதுமிதா, காவலர் மீது வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தியதாக பரவிய செய்திகுறித்து, நடிகை மதுமிதா விளக்கம் அளித்துள்ளார்.
அதில், சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான விடியோக்களையும், செய்திகளையும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் நடிகை மதுமிதா, தனது ஆண் நண்பருடன் சோழிங்கநல்லூர் சென்றுள்ளார். கோயிலுக்குச் சென்று திரும்பும்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்வதற்காக ஒருவழி பாதையைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
அப்போது, செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் எழுத்தராக உள்ள காவலர் ஓட்டிவந்த இரு சக்கர வாகனத்தின்மீது, மதுமிதா மோதியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் பரவின.
இதனிடையே இது குறித்து நடிகை மதுமிதா விளக்கம் அளித்து விடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
''வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விடியோ இது. நான் மதுபோதையில் காரை இயக்கி காவலர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாகவும், அந்தக் காவலர் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருப்பதாகவும் எல்லா செய்திகளிலும், யூடியூபிலும் தகவல் பரவி வருகிறது.
அது உண்மையில்லை. நான் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டவில்லை. உண்மையில், ஒரு சிறிய விபத்து நடந்தது. ஆனால், யாருக்கும் எதுவும் ஆகவில்லை. காவலர் நலமுடன் உள்ளார். நானும் நலமுடன் உள்ளேன். இதுபோன்ற பொய்யான விடியோக்களையும் செய்திகளையும் நம்ப வேண்டாம்'' எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்நீச்சல் படப்பிடிப்பு தளத்திலிருந்தவாறு நடிகை மதுமிதா இந்த விடியோவைப் பதிவு செய்துள்ளார். அவர், வழக்கம்போல படப்பிடிப்புக்கு வந்துவிட்டதையும் இதன்மூலம் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.