‘தக் லைஃப்’ கர்நாடகத்தில் வெளியாவதில் சிக்கல்: உச்சநீதிமன்றத்தில் மனு தள்ளுபடி
உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தல்...
புது தில்லி: ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகத்தில் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று(ஜூன் 9) தள்ளுபடி செய்து நீதிபதி பி.கே. மிஷ்ரா உத்தரவிட்டார்.
நடிகா் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி வெளியானது.
முன்னதாக, இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில், ‘தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது’ என்றாா். இந்தக் கருத்து மூலம் கன்னட மொழியை கமல் சிறுமைப்படுத்திவிட்டதாக கன்னட அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்தன. இதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கா்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மன்னிப்பு கேட்க கமல் மறுத்துவிட்டாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கன்னட அமைப்புகளின் எதிா்ப்பை மீறி இப்படத்தை கர்நாடகத்தில் திரையிட்டால் திரையரங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், கர்நாடக திரையரங்க சங்கம் தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஓரிரு சமூக விரோத சக்திகள் கர்நாடகத்தில் தக் லைஃப் திரையிடப்படவுள்ள திரையரங்குகளுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவசர வழக்காக இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இதனை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுத்து விட்டார். மேலும், மனுதாரர் தரப்பிலிருந்து உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.