புது தில்லி: ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகத்தில் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று(ஜூன் 9) தள்ளுபடி செய்து நீதிபதி பி.கே. மிஷ்ரா உத்தரவிட்டார்.
நடிகா் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி வெளியானது.
முன்னதாக, இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில், ‘தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது’ என்றாா். இந்தக் கருத்து மூலம் கன்னட மொழியை கமல் சிறுமைப்படுத்திவிட்டதாக கன்னட அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்தன. இதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கா்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மன்னிப்பு கேட்க கமல் மறுத்துவிட்டாா்.
இந்த நிலையில், கன்னட அமைப்புகளின் எதிா்ப்பை மீறி இப்படத்தை கர்நாடகத்தில் திரையிட்டால் திரையரங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், கர்நாடக திரையரங்க சங்கம் தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஓரிரு சமூக விரோத சக்திகள் கர்நாடகத்தில் தக் லைஃப் திரையிடப்படவுள்ள திரையரங்குகளுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவசர வழக்காக இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இதனை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுத்து விட்டார். மேலும், மனுதாரர் தரப்பிலிருந்து உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.