தமன்னா ரூ.3 கோடி சம்பளம் கேட்டார்: குயின் ரீமேக் சர்ச்சை குறித்து தியாகராஜன்!
இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. தமன்னா இல்லாவிட்டால் இந்தப் படத்தில் வேறொரு நடிகை நடிப்பார்.
விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான படம் 'குயின்'. அமோக வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் பெற்றார். 'குயின்' தமிழ் ரீமேக் படத்துக்கு சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத, ரேவதி இயக்குவதாக இருந்தது. கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் தமன்னா நடிப்பதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் குயின் தமிழ் ரீமேக் படம் ரத்து ஆகியுள்ளதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து நடிகர் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: ரீமேக் உரிமையை ரூ. 3 கோடி கொடுத்து வாங்கியுள்ளேன். நான் வாங்கியது தெரிந்து அதில் நடிக்கும் ஆர்வத்துடன் தன் தாயுடன் வந்து வாய்ப்பு கேட்டார் நடிகை தமன்னா. நானும் அவரை இதில் நடிக்கவைக்கலாம் என்று முடிவு செய்தேன். இப்படத்தில் நடிக்கச் சம்பளமாக ரூ. 3 கோடி கேட்டார் தமன்னா. என்னால் அவ்வளவு சம்பளம் தர இயலாது. இப்போது எவ்வளவு வாங்குகிறீர்களோ அதைத் தருகிறேன் என்றேன். அட்வான்ஸ் கேட்டார்கள். படம் ஆரம்பிக்கும்போது தருகிறேன் எனப் பதில் அளித்தேன்.
Advertisement
அட்வான்ஸ் தராததால் ரீமேக் படம் ரத்தாகியுள்ளதாக தமன்னா கூறிவருகிறார். இதனால் திரையுலகைச் சேர்ந்த பலரும் என்னிடம் விசாரித்துவருகிறார்கள். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. தமன்னா இல்லாவிட்டால் இந்தப் படத்தில் வேறொரு நடிகை நடிப்பார். அவர் இல்லாமலும் குயின் ரீமேக் படத்தை எடுக்கமுடியும் என்று கூறியுள்ளார்.