பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). இந்தப் படம், நேற்று வெளியாகியுள்ளது.
உலகம் முழுக்க இருந்து இந்தப் படத்துக்கு விமரிசனங்கள் குவிந்துவருகின்றன. கிட்டத்தட்ட அனைவரும் படத்தை ஆஹோஓஹோ எனப் பாராட்டுகிறார்கள். இந்திய சினிமாவின் மகத்தான படம் என்பதே பலருடைய கருத்தாக உள்ளது.
இந்நிலையில் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறியதாவது:
முதல்நாளன்று கிடைத்த வரவேற்பைப் பார்க்கும்போது, கான்கள், ரோஷன்கள், சோப்ராக்களை விடவும் பெரிய நட்சத்திரம் இயக்குநர் ராஜமெளலி என்பது தெளிவாகிறது. அவரைக் கண்டுபிடித்ததற்காக கரண் ஜோஹருக்கு நன்றி.
பாகுபலி 2 படத்தை ரசித்த அனைவரும் ராஜமெளலி போன்ற ஒரு வைரத்தைக் கண்டுபிடித்த மேதமைக்காக கரண் ஜோஹரை வணங்கவேண்டும். உலகம் கிறிஸ்து பிறப்பதற்கு முன், பின் எனப் பிரிந்ததுபோல இந்திய சினிமா இனிமேல் பாகுபலிக்கு முன், பின் என வகைப்படுத்தப்படும்.
பாகுபலி படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பைக் கண்டு பாலிவுட்டின் பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் அனைவரும் நடுங்கிப் போயிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.