முகப்பு
செய்திகள்

ரூ. 1 கோடி அபராதம் ரத்து: த்ரிஷா மீதான வருமான வரி வழக்கு ஒத்திவைப்பு!

வருமான வரித் துறை கண்டுபிடித்தபிறகே த்ரிஷா சரியான கணக்கைக் காண்பித்தார். எனவே அவருக்கு அபராதம் விதித்தது...

Updated On : 8 ஜூன், 2017 at 4:16 PM
பகிர்:

நடிகை த்ரிஷா மீது வருமான வரித் துறை தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒருவாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010-11ம் ஆண்டுகளில் நடிகை த்ரிஷா வருமான வரித் துறைக்குக் காண்பித்த கணக்கில் சில படங்களுக்கு முன்தொகையாக வாங்கிய ரூ. 3.50 கோடியைக் கணக்கில் காண்பிக்கவில்லை. இதைக் கண்டுபிடித்த வருமான வரித் துறை அதிகாரிகள் இதுகுறித்து த்ரிஷாவிடம் விசாரணை மேற்கொண்டார்கள். 

இதையடுத்து தனது வருமானமாக ரூ. 4.39 கோடி என்று புதிய கணக்கைக் காண்பித்தார் த்ரிஷா. ஆனால், முன்பே இந்த வருமானத்தைக் கணக்கில் காண்பிக்காததால் த்ரிஷாவுக்கு ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது வருமான வரித் துறை. 

Advertisement

இதை எதிர்த்து சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார் த்ரிஷா. வருமானக் கணக்கைத் திருத்தம் செய்தபிறகும் அபராதம் விதித்தது சரியல்ல என்று முறையிட்டிருந்தார். இதை ஏற்ற தீர்ப்பாயம், த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித் துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வருமான வரித் துறை கண்டுபிடித்த பிறகே த்ரிஷா சரியான கணக்கைக் காண்பித்தார். எனவே அவருக்கு அபராதம் விதித்தது சட்டப்படி சரிதான் என்று மனுவில் தெரிவித்தது. 

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.