பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). இந்தப் படம், கடந்த வெள்ளியன்று வெளியானது.
படம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்திவருகிறது. அதேபோல பாராட்டுகளும் குவிந்துவருகின்றன. ரஜினி ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
பாகுபலி 2, இந்திய சினிமாவின் பெருமை. கடவுளின் குழந்தையான இயக்குநர் ராஜமெளலி மற்றும் அவரது குழுவுக்கு என்னுடைய சல்யூட் என்று பாராட்டியுள்ளார்.
இதற்குப் பதில் அளித்துள்ள இயக்குநர் ராஜமெளலி, தலைவா... கடவுளே எங்களை வாழ்த்தியதுபோல உணர்கிறேன். எங்கள் குழு மிகுந்த சந்தோஷத்தில் உள்ளது. இதைவிட பெரிய பாராட்டு இருக்கமுடியாது என்று மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.
அதேபோல இயக்குநர் ஷங்கரும் பாராட்டியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: இப்போதுதான் பாகுபலி பார்த்தேன். இந்திய சினிமாவின் பெருமை. என்ன ஒரு வீரம், அழகு, பிரமாண்டம், இசை. வியந்துபோயிருக்கிறேன். ராஜமெளலி மற்றும் அவருடைய குழுவினருக்குப் பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள ராஜமெளலி, நன்றி சார். உங்கள் வார்த்தைகள் இன்னும் அதிகமாக உழைக்க ஊக்கப்படுத்துகின்றன. எங்கள் குழு கொண்டாட்டத்தில் உள்ளது என்று கூறியுள்ளார்.