சென்னை: விஜய் சேதுபதி நடித்த "சீதக்காதி" படத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் - சீதக்காதி. இசை - கோவிந்த் வசந்தா. விஜய் சேதுபதி நடித்த ஜுங்கா, செக்கச் சிவந்த வானம், 96 ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகின. இதையடுத்து சீதக்காதி படம் டிசம்பர் 20 அன்று வெளிவரவுள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்த "சீதக்காதி" படத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைக் சேர்ந்த முகம்மது சாலையா உசேன் என்பவர் இந்த மனுவினை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். கீழக்கரையில் வாழ்ந்து மறைந்த வள்ளல் சீதக்காதியின் வழி வந்தவரான அவர் தனது மனுவில் கூறியுள்ளதாவது:
சீதக்காதி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படமானது எங்கள் முன்னோரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கலாம் என்று கருதுகிறோம். எனவே சீதக்காதி படம் வெளிவருவதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தனது மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவானது வியாழனன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.