16 மாடிக் கட்டடமாக மாறும் அபிராமி மெகா மால்! அடுக்குமாடிக் குடியிருப்பில் சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு முன்னுரிமை!
ஷாப்பிங் மால், திரையரங்குகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கொண்ட 17 மாடிக் கட்டடமாக மாறவுள்ளது...
சென்னையைச் சேர்ந்த அபிராமி மெகா மால் வளாகம் புனரமைப்பு செய்யப்பட்டு, ஷாப்பிங் மால், திரையரங்குகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கொண்ட 16 மாடிக் கட்டடமாக மாறவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1976 முதல் இயங்கி வரும் அபிராமி திரையரங்கம் முதலில் இரு திரையரங்குகள் கொண்ட வளாகமாக இருந்தது. அதன்பிறகு 1982-ல் அன்னை அபிராமி, சக்தி அபிராமி என கூடுதலாக இரு திரையரங்குகள் புதிதாகக் கட்டப்பட்டன. இதன்பிறகு 2002-ல் முற்றிலும் புதிய வடிவமாக மாறியது. அபுராமி மெகா மால் உருவானது. 7 ஸ்டார், ரோபோ பால அபிராமி, ஸ்ரீ அன்னை அபிராமி, ஸ்வர்ண சக்தி அபிராமி என்கிற பெயர்களுடன் நவீன வசதிகளுடன் திரையரங்குகள் மாற்றப்பட்டன.
இந்நிலையில் 1000 இருக்கைகள் கொண்ட திரையரங்குகளுக்கு இனி எதிர்காலம் இல்லை என்பதால் புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன்படி அபிராமி மெகா மால் பிப்ரவரி 1 முதல் இயங்காது. பொங்கல் படங்களுக்குப் பிறகு புதிய வெளியீடுகள் இத்திரையரங்கில் திரையிடப்படாது. முழு வளாகமும் புனரமைப்பு செய்யப்பட்டு - ஷாப்பிங் மால், திரையரங்குகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கொண்ட 16 மாடிக் கட்டடமாக மாறவுள்ளது. முதல் 3 மாடிகள் (தரைத்தளம் + 2 மாடிகள்) திரையரங்குகள், ஷாப்பிங் மால் கொண்ட வணிக வளாகமும் அதற்கு மேல் 14 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பும் கட்டப்படவுள்ளன. இக்கட்டடத்தில் சைவ உணவு உண்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 வருடங்களில் இந்தக் கட்டடம் செயல்பட ஆரம்பிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.