சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எது செய்தாலும் அது சரியாகவும் அதிரடியாகவும் இருக்கும் என நம்புகிறவர்கள் அவரது ரசிகர்கள். இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலா வெளியான பிறகு ரஜினி படங்களில் நடிப்பாரா அல்லது தீவிர அரசியல் சூழ்நிலையில் அவரால் நடிப்புக்கு நேரம் ஒதுக்க முடியுமா என்ற கேள்விகள் இருந்துவரும் நிலையில், ரஜினி சில இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார். அவற்றுள் அரசியல் கதையம்சம் உள்ள திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்கவிருக்கிறார்.
இளம் இயக்குநர்களை ஊக்குவிப்பதில் ரஜினிக்கு நிகர் அவரே. அட்லி முதல் அருவி இயக்குநர் அருண் பிரபு வரை பலர் சூப்பர் ஸ்டாரின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் அட்லி ரஜினியிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அது பரிசீலினையில் இருக்கும் சமயத்தில், அண்மையில் காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன் தன்னுடைய 'கடைசி விவசாயி’ படத்தில் ரஜினி நடித்தால், அப்படத்தின் மூலம் தான் சொல்ல வந்த கருத்துக்கள் கவனம் பெறும் என எதிர்ப்பார்த்து ரஜினியிடம் கதையை கூறியிருக்கிறார்.
ரஜினி எந்தப் படத்தில் நடிப்பார் என்ற முடிவு விரைவில் தெரிந்துவிடும். மணிகண்டனுக்கு சிபாரிசு தனுஷ் என்பதால் பரிசீலினையின் முதலிடத்தில் கடைசி விவசாயி இருக்கிறது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இல்லாததால் ரஜினி படங்களில் நடிப்பாரா என்ற ஆரம்பக் கேள்வியைப் போலவே பதிலும் தொக்கி நிற்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.