அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் - மெர்சல். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். மெர்சல் படத்தில் மருத்துவர்களைப் பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்தது. இதனால் பெரும் சர்ச்சை உருவானது. எனினும், மெர்சல் படத்தின் வசூல் ரூ. 250 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படம் நேற்று முதல்முறையாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ஜீ தமிழில் இந்தப் படம் நேற்று ஒளிபரப்பானபோது சர்ச்சைக்குரிய காட்சிகளில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. வடிவேல் பேசும் டிஜிடல் இந்தியா தொடர்பான வசனத்தில் டிஜிடல் இந்தியா என்கிற வார்தை ம்யூட் செய்யப்பட்டிருந்தது. அதேபோல கோயிலுக்குப் பதிலாக மருத்துவமனை கட்டலாம் என்று விஜய் பேசும் வசனத்தில் கோயில் என்கிற வசனமும் ம்யூட் செய்யப்பட்டிருந்தது. மெர்சல் படத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியின் ஜிஎஸ்டி வசனமும் மாற்றத்துக்கு ஆளாகியிருந்தது. க்ளைமாக்ஸ் காட்சியில் ஜிஎஸ்டி என்கிற வார்த்தை மட்டும் ம்யூட் செய்யப்பட்டிருந்தது.
எனினும் இதுபோன்ற நீக்கப்பட்ட வசனங்களுக்கு மத்தியில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் இருமுறை ஒளிபரப்பானது. திரையரங்கில் ஒன்ஸ்மோர் கோரிக்கைக்குப் பாடலோ ஒரு காட்சியோ இருமுறை ஒளிபரப்பாவதுபோல ஆளப்போறான் தமிழன் பாடல் ஜீ தமிழில் நேற்று இருமுறை ஒளிபரப்பப்பட்டன.