சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணையவுள்ளது. இதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்தப்படத்தில் விஜயுடன் கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஜோடி சேர்க்கிறார். அத்துடன் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் மற்றும் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஜனவரி 19-ம் தேதி அன்று சென்னையில் துவங்கியது. தற்போது ஈசிஆரில் 100க்கும் மேற்பட்ட படகுகளைக் கொண்டு படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இப்படத்திற்கு தமிழின் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசன எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயமோகன் இதற்கு முன்னதாக அங்காடித் தெரு, நீர்ப்பறவை, கடல், ஏமாலி மற்றும் 2.0 உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில், முதன் முறையாக ஜெயமோகன் சேர உள்ளதால், படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.