சூர்யா - கே.வி. ஆனந்த் படம்: லண்டனில் தொடங்கியது (படங்கள்)
லண்டனில் இப்படத்துக்கான பூஜை இன்று நடைபெற்றது. இதில் சூர்யா, கே.வி. ஆனந்த் உள்ளிட படக்குழுவினர்...
செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்கிற படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக இயக்குநர் கே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைகிறார். இந்தப் படத்தில் மோகன் லாலும் நடிக்கவுள்ளார். மோகன்லால், கடைசியாக 2014-ல் ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார். அதன்பிறகு இப்போதுதான் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷும் இணைந்துள்ளார். கெளரவம் படம் மூலமாகத் தமிழில் அறிமுகமான அல்லு சிரிஷ் நடிக்கும் இரண்டாவது தமிழ்ப்படம் இது. சூர்யாவின் ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். சமுத்திரக்கனி, பாலிவுட் நடிகரான போமன் இராணி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லைக்கா தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், எழுத்து - பட்டுக்கோட்டை பிரபாகர், ஒளிப்பதிவாளர் - கேவ்மிக் யு அரி, கலை - கிரண்.
அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு சூர்யா - கே.வி. ஆனந்த் ஆகிய இருவரும் மீண்டும் இணைகிறார்கள். ஒரு படத்தின் தோல்விக்குப் பிறகு அப்படத்தின் நடிகர் - இயக்குநர் கூட்டணியை மீண்டும் காணமுடியாது. ஆனால் மாற்றான் படம் வெற்றியடையாவிட்டாலும் கே.வி.ஆனந்துடன் மீண்டும் இணைகிறார் சூர்யா.
Advertisement
அயன், மாற்றான் படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். அதன்பிறகு மீண்டும் கே.வி. ஆனந்த் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ள கேவ்மிக் - ஜிகர்தண்டா, அம்மா கணக்கு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. லண்டனில் இப்படத்துக்கான பூஜை இன்று நடைபெற்றது. இதில் சூர்யா, கே.வி. ஆனந்த் உள்ளிட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள்.