தமிழ் சினிமாவில் பிரிக்க முடியாதது சில உண்டு. அதிலொன்று சிம்புவும் சர்ச்சைகளும். சிம்புவின் மறுபெயர் சர்ச்சையா எனுமளவுக்கு தமிழ் ஹீரோக்களில் அதிகம் கண்டனத்துக்குள்ளானவர் சிம்பு ஒருவரே. தற்போது இயக்குநர் மணி ரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கிறார். அண்மையில் சிம்பு தன் தந்தையை தாக்கி மீம்ஸ் போடுபவர்களை கடுமையாக விமரிசித்திருந்தார். அதற்கு சமூக வலைத்தளங்களில் ஒரு ரியாக்ஷனும் இல்லாத நிலையில் தற்போது அவரது ஒரு புகைப்படம் நேற்று முதல் சோஷியல் மீடியாவில் ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருக்கிறது. அந்த செல்ஃபியில் சிம்புவுடன் இருப்பவர் இயக்குநர் ரத்தின சிவா.
விஜய் சேதுபதி நடிப்பில் றெக்க என்ற படத்தை இயக்கியவர் ரத்தின சிவா. சிம்புவும் சிவாவும் இருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகி வருவதால் ரத்தின சிவா சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது.
ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளிவராத நிலையில் இயக்குநர் ரத்தின சிவா தற்போது விளக்கமளித்துள்ளார். சிம்புவுடனான தனது சந்திப்பு நட்புரீதியானது. இப்போதைக்கு ஒரு லைன் சொல்லியிருப்பதாகவும், அது சிம்புவுக்குப் பிடிக்குமானால் மேற்கொண்டு இது குறித்து முன்னேற்றம் ஏற்படலாம் என்றார். சிம்பு அண்ணனுக்காக காத்திருக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
சிம்புவைப் பொருத்தவரையில் இயக்குநர் மணி ரத்னம் படத்தில் நடிப்பது அவரது திரையுலக வாழ்க்கையில் முக்கியமானதாக கருதுகிறார். அதன்பின் தனது க்ராஃப் மாறும் என்று உறுதியாக நம்புகிறார்.