முகப்பு
செய்திகள்

அப்பாவின் ராஜிநாமா முடிவுக்கும் சர்கார் விவகாரத்துக்கும் சம்பந்தம் இல்லை: நடிகர் சாந்தனு

அறிக்கையில் கூறியது போல அப்பாவின் சொந்த முடிவு. சர்கார் குழுவோ சர்கார் படக்கதை விவகாரமோ இதற்கு எவ்விதத்திலும்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியை கே. பாக்யராஜ் ராஜிநாமா செய்துள்ளார். இந்நிலையில் அவருடைய இந்த முடிவுக்கும் சர்கார் படத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று நடிகர் சாந்தனு கூறியுள்ளார். 

சர்கார் படக்கதை சர்ச்சை தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும், உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதையடுத்து, இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியை கே. பாக்யராஜ் ராஜிநாமா செய்துள்ளார்.  இந்தப் பொறுப்பை ஏற்று 6 மாதங்களே ஆன நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

திடீர் என்று சர்கார் படம் சம்பந்தமாகச் சங்கத்துக்கு ஒரு புகார் வந்தது. அந்தப் புகாரைப் பரிசீலித்து சம்பந்தப்பட்ட உறுப்பினரிடம் உண்மை இருப்பதாகத் தெரிந்ததால், அவருக்கு நியாயம் வழங்க பொறுப்பில் உள்ள முக்கியமானவர்கள் அனைவரையும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்து, நல்லபடியாக, நியாயமாக அதைச் செயல்படுத்தவும் முடிந்தது. ஆனால் அதில் பல அசெளகரியங்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. அதற்கு முக்கியக் காரணமாக  நான் நினைப்பது, தேர்தலில் நின்று ஜெயிக்காமல் நேரடியாகத் தலைவர் பொறுப்புக்கு வந்ததுதான் என்று நினைக்கிறேன். முறையாகத் தேர்தலில் நின்று அதிபெரும்பான்மையுடன் ஜெயித்து பொறுப்பை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து கடமையுடன் செயல்படப்போகிறேன். எனக்கு நேர்ந்த அசெளகரியங்கள் என்ன, ஒழுங்கினங்கள் என்ன என்பதைச் சங்க நலன், நற்பெயர் கருதி வெளியிட விரும்பவில்லை. மேலும் நான் முருகதாஸிடம் கெஞ்சியும் உடன்படாததால், சர்கார் படக்கதையைச் சொல்ல நேர்ந்தது. இருந்தாலும் தவறு என உணர்ந்து சன் பிக்சர்ஸிடம் மன்னிப்பு கோருகிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார். 

Advertisement

இந்நிலையில் சர்கார் பட விவகாரத்தால் தன்னுடைய தந்தை, திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யவில்லை என பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனு கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் எழுதியதாவது:

திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தது அறிக்கையில் கூறியது போல அப்பாவின் சொந்த முடிவு. சர்கார் குழுவோ சர்கார் படக்கதை விவகாரமோ இதற்கு எவ்விதத்திலும் சம்பந்தம் கிடையாது. தவறான குற்றச்சாட்டுகளையும் தவறான யூகங்களையும் உருவாக்குவதை  தயவு செய்து நிறுத்துங்கள். இந்தப் பிரச்னையை இத்துடன் முடித்துக்கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments