சுபம்: தட்டிவிட்ட செல்போனுக்குப் பதிலாக ரூ. 21,000 மதிப்புள்ள செல்போனை இளைஞருக்கு வழங்கினார் சிவக்குமார்
அந்த இளைஞருக்கு ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்யும் விதமாக புதிய செல்போனை...
நினைத்ததுபோலவே இந்தப் பிரச்னை முடிவு பெற்றுள்ளது.
தனியார் மருத்துவமனை தொடர்பான விழா ஒன்றில் நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டபோது அவருடன் இணைந்து செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டார். இந்த விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியான நிமிடம் முதல் சிவக்குமாரின் நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் கருத்து தெரிவித்தார்கள்.
இந்ந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகர் சிவக்குமார் தெரிவித்ததாவது: உங்களுடன் சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்கொள்கிறேன் என்று அனுமதி வாங்கினால் என்ன? விஐபி என்கிறவர் நீங்கள் சொன்னபடி நிற்கவேண்டும், சொன்னபடிக் கேட்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்விதத்தில் நியாயம்? விமான நிலையங்களிலும் திருமண விழாக்களிலும் எத்தனையோ பேருக்கு செல்போனில் புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்திருக்கிறேன். நான் புத்தன் அல்லன். நானும் மனிதன் தான். என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் கதாநாயகன் தான். ஆனால் அடுத்தவர்களை எந்த அளவுக்கு நாம் துன்புறுத்துகிறோம் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கவேண்டும் என்று விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் சிவக்குமார் வெளியிட்ட விடியோவில் கூறியதாவது:
Advertisement
ஆர்வம் மிகுந்த ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொள்வார்கள். ஒரு பிரபலக் கலைஞர் அதையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். என்ன இருந்தாலும் சிவக்குமார் செல்போனைத் தட்டி விட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும்பட்சத்தில் என செயலுக்காக உளமாற வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
இந்நிலையில் வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது, அந்த இளைஞருக்கு ஏற்பட்ட பாதிப்பைச் சரிசெய்யும் விதமாக புதிய செல்போனை வழங்கவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தார்கள். அதேபோல அந்த இளைஞருக்கு ரூ. 21,000 மதிப்புள்ள செல்போனை வழங்கியுள்ளார் நடிகர் சிவக்குமார்.
நடிகர் என்கிற ஆர்வத்தில் செல்ஃபி எடுத்தேன். இனிமேல் அனுமதியின்றி செல்ஃபி எடுக்கமாட்டேன் என்று ராகுல் கூறியுள்ளார்.