3.0 படம் உருவாக வாய்ப்பு: ஷங்கர் அறிவிப்பு!
நம் ஊரிலும் இப்படியொரு படம் எடுக்கமுடியும் என்று உலகத்துக்குக் காண்பிக்கமுடியும்...
ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது. நவம்பர் 29 அன்று வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. ரஜினி, ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இப்படவிழாவில் கலந்துகொண்டார்கள். படவிழாவில் ஷங்கர் பேசியதாவது:
ரஜினி சாரை இந்தப் படத்தில் வசீகரனாக, சிட்டியாக, 2.0-வாகப் பார்க்கப் போகிறீர்கள். படத்தில் ரசிகர்களுக்கு நிறைய ஆச்சர்யங்கள் உள்ளன.
2.0 என படத்துக்கு டைட்டில் வைத்ததற்குக் காரணம், சொல்லும்போது நன்றாக இருந்தது. எந்த மொழியாக இருந்தாலும் சொல்வதற்குச் சுலபமாக இருக்கும். இந்திய சினிமாவுக்காக யாரும் இவ்வளவு செலவு பண்ணமுடியாது. ஆனால் படத்தின் மீது நம்பிக்கை வைத்து செலவு செய்தார் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்.
என்னை எப்போதும் ஊக்கப்படுத்துவது ரசிகர்கள்தாம். சின்னச் சின்ன யோசனைகள் வந்துள்ளன. 3.0 உருவாக வாய்ப்புள்ளது. பார்க்கலாம்.
நமக்குப் பிடித்த நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று படம் செய்யாமல் முதலில் நல்ல கதையைத் தேர்ந்தெடுத்துவிட்டுப் படம் இயக்குங்கள். அதன்பிறகு கதைக்கு ஏற்றாற்போல் நடிகர்கள், தயாரிப்பாளர்களின் தேர்வு இருக்கவேண்டும்.
ரஜினி சாருக்குச் சில சமயம் உடல்நிலை சரியில்லாத போதும், காலில் காயம் ஏற்பட்டபோதும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். அவர் இப்போதும் எது செய்தாலும் கவரும் விதத்தில், ஸ்டைலாக, மாஸாக உள்ளன. இன்றைக்கும் அவருடைய நடிப்பு புதுமையாக உள்ளது.
ஊடகங்களுக்குத் தாழ்மையான வேண்டுகோள். இதுபோன்ற படத்தை ஆதரியுங்கள். நம் ஊரிலும் இப்படியொரு படம் எடுக்கமுடியும் என்று உலகத்துக்குக் காண்பிக்கமுடியும். அதனால், இதுபோல நிறைய படம் வரும் என்றார்.