முகப்பு
செய்திகள்

மதுபோதையில் கார் ஓட்டி அபராதம் செலுத்தியதாக வெளியான செய்தி தவறு: காயத்ரி ரகுராம் விளக்கம்!

மதுபோதையில் கார் ஓட்டி காவலர்களிடம், தான் பிடிபட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

மதுபோதையில் கார் ஓட்டி காவலர்களிடம், தான் பிடிபட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

படங்களில் கதாநாயகியாகவும் நடனக் கலைஞராகவும் பணியாற்றி வரும் காயத்ரி ரகுராம், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் புகழை அடைந்தார். இந்நிலையில் மதுபோதையில் கார் ஓட்டி வந்த காயத்ரி ரகுராம், ஓட்டுநர் உரிமமும் இல்லாததால் போக்குவரத்துக் காவலர்களின் சோதனையில் பிடிபட்டு பிறகு அபராதம் செலுத்தியதாக செய்தி ஒன்று வெளியானது. இச்செய்தி முற்றிலும் தவறானது என அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். ட்விட்டரில் இதுகுறித்து அவர் கூறியதாவது:

எதையோ மறைக்க நான் செய்தியாக்கப்பட்டுள்ளேன். பேனாவும் பத்திரிகையும் பலமானதாக இருக்கலாம். ஆனால் எனது ஆன்மா, வாழ்க்கையை விடவும் பலமானதல்ல. தொடர்ந்து எழுதுங்கள். நான் துணிச்சலுடன் வாழ்வேன். நான் எனது படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். சக நடிகரை வீட்டில் இறக்கிவிட வந்துகொண்டிருந்தேன். வழக்கமான வாகனச் சோதனைக்குத்தான் நான் நிறுத்தப்பட்டேன். காவலர்களுடன் வாக்குவாதம் எதுவும் நடக்கவில்லை. அந்த நிருபர் தனக்குத் தோன்றியதை எழுதியுள்ளார். 

Advertisement

என்னுடைய ஓட்டுநர் உரிமம் வேறொரு கைப்பையில் இருந்ததால் அப்போது என்னால் காவலர்களிடம் அதைக் காண்பிக்கமுடியவில்லை. என்னுடைய ஆவணத்தைச் சரிபார்க்க என்னுடன் வந்தார் போக்குவரத்துக் காவலர். அவர்களின் பணியை நான் பாராட்டினேன். என் தந்தையைப் பற்றி காவலர் விசாரித்தார். அவர் என்னுடைய ரசிகரும்கூட.  நாங்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டோம். காரை நான்தான் ஓட்டிச் சென்றேன். ஒருவேளை நான் குடிபோதையில் இருந்திருந்தால் என்னை எப்படி கார் ஓட்ட அனுமதித்திருப்பார்கள்? காரை வேகமாகவும் ஓட்டவில்லை. எல்லாம் பொய்கள். நான் அங்கு 10 நிமிடங்கள்தான் இருந்தேன். 

போதையில் இருந்த நிருபரை விட்டுவிட்டு எல்லோரும் என்னைக் குறிவைக்கிறார்கள். தனிப்பட்ட சுதந்தரம் என்பதே இங்கில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

இதற்குப் பதில் அளித்துள்ள நடிகையும் பிக் பாஸில் காயத்ரி ராகுராமின் சக போட்டியாளருமான காஜல் பசுபதி, நான் தான் கூட இருந்தேன். இது என்ன புதுக் கதை? இஷ்டத்துக்கு அடித்து விடுகிறார்கள். கவலைப்படவேண்டாம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments