இயக்குநர் சுசி கணேசன் மீது நடிகை அமலா பால் ‘மீ டூ’ புகார்!
இயக்குநர் லீனா மணிமேகலையைத் தொடர்ந்து நடிகை அமலா பாலும் இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றம் சாட்டியுள்ளார்...
இயக்குநர் லீனா மணிமேகலையைத் தொடர்ந்து நடிகை அமலா பாலும் இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மைகாலமாகச் சமூகவலைத்தளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களையும், கொடுமைகளையும் பகிர்ந்து வருவது பரவலாகக் கவனத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சில முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இயக்குநர் சுசி கணேசன் மீது புகார் தெரிவித்துள்ளார் கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலை. காரில் வைத்து தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து ஃபேஸ்புக்கில் கவிஞர் லீனா மணிமேகலை தெரிவித்த புகார் தொடர்பாக அவர் மீது வழக்குத் தொடந்துள்ளார் இயக்குநர் சுசி கணேசன்.
Advertisement
இந்நிலையில், நடிகை அமலா பால் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டை நான் ஆதரிக்கிறேன். பெண்கள் மீது குறைந்த மரியாதை கொண்டுள்ளவரிடம் அவருக்கு என்ன நேர்ந்திருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது.
திருட்டுப் பயலே 2 படத்தின் கதாநாயகியாக இருந்தும் இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சுக்கள், யாருக்கோ அவர் கூறும் அழைப்புகள், காரணமின்றி உரசியபடி பேசுவது என நானும் பல்வேறு சங்கடங்களைச் சந்தித்துள்ளேன். இதனால் திருட்டுப் பயலே 2 படத்தின் படப்பிடிப்பு அனுபவம் மன ரீதியாகச் சோர்வளித்தது. இதைவைத்து லீனா மணிமேகலை என்ன பாடுபட்டிருப்பார் என்று புரிந்துகொள்ளமுடிகிறது.
ஆன்மிகத் துறையிலிருந்தும் கலைத் துறையிலிருந்தும் பல உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதேபோல மற்ற துறைகளிலிருந்தும் மீ டூ குறித்த பதிவுகள் வெளிவரவேண்டும். பெண்களுக்குத் தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் சட்ட ரீதியாக அமல்படுத்த வேண்டும். இவ்விதமானக் கட்டுப்பாடுகளே பெண்களைப் போகப் பொருளாகச் சித்தரிக்கும் சிலருக்கு எச்சரிக்கை மணியாகும் என்று கூறியுள்ளார்.