ஏ.எம். ரெட் கார்ப்பரேட் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் படம் 'வேறென்ன வேண்டும்'.
நரேன்ராம் தேஜ், பெரான கண்ணா, தர்ஷன், அனுபமா, சுப்பிரமணி, ஆதித்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சிவபாரதி குமாரன் எழுதி இயக்குகிறார். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நாகரீக மாற்றங்கள், பொருளாதார நெருக்கடி, அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை, துரித உணவு முறை என எல்லாமே மனித வாழ்வின் கோபத்தை சுமந்துக் கொண்டுதான் நிற்கின்றன. இதை விட ஒரு கொடுமை.. இப்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்கள். குறிப்பாக, சமூக வலைதளங்களின் வளர்ச்சி அதிகரித்து விட்டது.
சக மனிதனிடம் கூட பேசாத காலம் உருவாகி விட்டது. பிறந்த நாள் வாழ்த்துகள் தொடங்கி, அன்றாடம் பரிமாறப்படும் செய்திகள் வரை எல்லாமே தொழில்நுட்பத்தை நம்பியே இருக்கின்றன. எதிர்காலத்தில் முகநூல் திருமணங்கள் நிகழலாம் என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஆனால், அண்மைக் காலமாக இது போன்று நடந்து வரும் பிரச்னைகளும் அதிகம். மருத்துவ மாணவி ஒருவரை முகநூலில் காதலித்த பாதுகாப்பு அதிகாரி சுட்டுக் கொன்றுள்ளார். இது போன்ற நிறைய சம்பவங்களின் தொகுப்பாக இது உருவாகி வருகிறது. வலைதளங்களால் இளைய சமுதாயம் என்ன தீமைகளை அடைந்திருக்கிறது என்பதை சொல்லுவதே படம்.