திரைப்படங்களில் தொலைப்பேசி எண்களைப் பயன்படுத்தும்போது உபயோகத்தில் இல்லாத எண்களையே பயன்படுத்துவார்கள். ஆனால் சமீபத்தில் வெளிவந்த ஹிந்திப் படமொன்றில், பயன்பாட்டில் உள்ள ஒரு தொலைப்பேசி எண் குறிப்பிடப்பட்டதால் தில்லையைச் சேர்ந்த ஒருவர் பல தொல்லைகளை அனுபவித்து வருகிறார்.
சமீபத்தில் வெளிவந்த அர்ஜூன் பாட்டியாலா என்கிற ஹிந்திப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார் பிரபல நடிகை சன்னி லியோன். அப்படத்தின் ஒரு காட்சியில் தன்னுடைய தொலைப்பேசி எண் என ஓர் எண்ணை அவர் வழங்குவார். அது தில்லியைச் சேர்ந்த புனீத் அகர்வால் என்பவருடைய எண். இதனால் அந்த நபருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
27 வயது புனீத் அகர்வாலுக்கு தினமும் 100, 150 தொலைப்பேசி அழைப்புகள் வருகின்றனவாம். சன்னி லியோனிடம் பேசமுடியுமா என்று முதலில் கேட்டுவிட்டு பிறகு அவரிடம் மோசமாகப் பேசுகிறார்களாம். முதலில் எதனால் இப்படித் தனக்கு போன் செய்கிறார்கள் என்று குழம்பியவர், பிறகுதான் தன்னுடைய தொலைப்பேசி எண் அர்ஜூன் பாட்டியாலா படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிந்துள்ளார். உடனே, பலர் மோசமாகப் பேசி தன்னைத் துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்த விவகாரம் குறித்து நடிகை சன்னி லியோனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: மன்னிக்கவும். உங்களுக்கு இப்படி நடக்கவேண்டும் என்றெண்ணி அப்படிச் செய்யவில்லை. எனினும் சுவாரசியமான மனிதர்களிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கும் என்று கிண்டலாகப் பதில் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.