தமிழ்ப் பெண்களுக்குப் பதிலாக மலையாளப் பெண்களை நடிக்க வைத்தது ஏன்?: இயக்குநர் சேரன் விளக்கம்!
பொக்கிஷம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து ஆகிய படங்களுக்குத் தமிழ்ப் பெண் தான் வேண்டும் என்று தேடி...
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக அறிமுகமாகும் படம் - மிக மிக அவசரம். பெண் காவலர் கதாபாத்திரத்தில் ஸ்ரீ பிரியங்கா நடித்துள்ளார். அரீஷ் குமார், சீமான் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - இஷான் தேவ்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் சேரன் பேசியதாவது:
சுரேஷ் காமாட்சி என்றாலே ஏதாவது மேடைகளில் சினிமாவில் உள்ள பிரச்னைகளைப் பற்றிப் பேசுபவராக, முக்கியமான தலைகளை எதிர்த்து குரல் கொடுப்பவராகப் பார்க்கப்படுகிறார். ஆனால் அவருக்கு இரண்டு முகங்கள் உண்டு. அவர் பேசும்போது நமக்கு தெரிவது ஒரு முகம். ஆனால் ஒரு படைப்பாளியாக அவரைப் பார்க்கும்போது நிச்சயம் முற்றிலும் வேறாக இருக்கிறார்.
இந்த படத்தை நான் பார்த்ததும் அவரிடம் நீங்கள் இனிமேல் நிறைய பேசாதீர்கள், அடுத்தடுத்து படங்களை இயக்குவதில் கவனம் செலுத்துங்கள் எனக் கூறினேன். காரணம் அடுத்தடுத்து அவர் இயக்க இருப்பதாகச் சொன்ன கதைகள் எல்லாம் அவ்வளவு வித்தியாசமானவை. அவருடன் துணையாக இருக்கும் ஜெகன்நாத் என்னிடம் உதவியாளராக இருந்து, எனக்காகப் பத்துவருடங்கள் உழைத்தார் என்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஜெகன் மீது எனக்கு எப்போதும் கோபம் இல்லை. வருத்தம் மட்டும் தான் இருந்தது, அதுவும் போய்விட்டது.
இந்தப் படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்கா தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தும்போதெல்லாம் என்னைத்தான் சொல்கிறார்கள் என நான் நினைத்துக்கொள்வேன். காரணம் கேரளாவில் இருந்து பல நடிகைகளை என் படங்களில் நடிக்கவைத்துள்ளேன். நாங்களும் பொக்கிஷம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து ஆகிய படங்களுக்குத் தமிழ்ப் பெண் தான் வேண்டும் என்று தேடி அலைந்தோம். எங்களுக்கு நல்ல முகமும் கிடைக்கவில்லை, திறமையானவர்களும் கிடைக்கவில்லை. தமிழ்ப்பெண்களை நிராகரிக்கவேண்டும் என்பதில்லை. பத்மப்ரியா எல்லாம் தமிழ்ப் பெண்தான். மலையாளப் பெண் கிடையாது. தமிழ்நாட்டில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நடிப்புத் திறமையுள்ள பெண்கள் நடிக்க ஆர்வமாக முன் வராததுதான். குறும்படத்தில் ஆல்பத்தில் நடிக்கும் பெண்கள் கூட சினிமாவில் நடிக்க தயங்குகிறார்கள் எனக் கூறினார்.