முகப்பு
செய்திகள்

ரெளடி பேபிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள்!

கோலிவுட், மல்லுவுட் மற்றும் டோலிவுட் என தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:52 AM
பகிர்:

கோலிவுட், மல்லுவுட் மற்றும் டோலிவுட் என தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. தமிழை விட தெலுங்குப் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. அவரது ஆக்டிவ் நடிப்பில் வெளியான ஃபிடா தெலுங்கு பட ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துவிட்டது. தற்போது ராணாவுடன் விரத பர்வதம் 1992 என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இன்று சாய் பல்லவிக்கு பிறந்த நாள். 27-வயதாகும் சாய் பல்லவி 'நேச்சுரல் ப்யூட்டி’ என்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். 27 வயதில் ஒரு நடிகை புகழ் பெறுவது என்பது தென்னிந்திய திரை உலகில் ஆச்சரியமான உண்மை. மலர் எனும் கதாபாத்திரத்தில் 2015-ம் ஆண்டு பிரேமம் என்ற மலையாளப் படத்தில் நடித்ததுதான் அவரது ஆரம்பம். அதன்பின் தொடர் வெற்றிகளை தனது பாதையில் குவித்து வருகிறார் சாய்.

வருண் தேஜ் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ஃபிடா என்ற தெலுங்குப் படத்தில் பானுமதி என்ற கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்கள் மனதில் பசையாக ஒட்டிக் கொண்டார். பிரேமம் மற்றும் ஃபிடா இந்த இரண்டு படங்களும் வெற்றி மட்டுமல்ல விருதுகளை அவருக்குப் பெற்றுத் தந்தது. 

Advertisement

தமிழில் 2018-ம் ஆண்டு இயக்குநர் விஜய்யின் தியா என்ற படத்தில் நடித்தார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னரே தாம் தூம் என்ற படத்தில் கதாநாயகியின் தோழியாக அறிமுகமானார். அந்தப் படம் அவருக்கு சரியான கவனத்தை தராவிட்டாலும் மனம் தளராமல் தன் வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டார். டாக்டர் படிப்பு முடிந்ததும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடனப் போட்டியில் பங்கேற்றார்.

அதன் பின்தான் மாலிவுட் எண்ட்ரி. தமிழில் மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் பட வெற்றிக்குப் பின்னர் தென்னிந்திய திரையுலகின் மோஸ்ட் வாண்டட் நடிகையாக சாய் பல்லவி மாறிவிட்டார். தற்போது கன்னட படம் ஒன்றிலும் ஒப்பந்தமான நிலையில், தென்னிந்திய மொழிகள் நான்கிலும் தோன்றும் முக்கியமான நடிகை என்ற பெருமையையும் அவருக்கு வந்து சேர்ந்தது.

சாய் பல்லவியின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர் 'girl next door’ போன்ற அவரது தோற்றம்தான். போலவே கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஸ்டீரியோ டைப் விஷயங்களை தகர்த்தவர் சாய் பல்லவி. இயல்பான நடிப்பு, அழகான சிரிப்பு, அட்டகாசமான நடனம் என்று அவர் தனது வேலையில் முழுத் திறனுடன் இயங்குகிறார். சினிமா பின்புலம் எதுவும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவர், இன்று இவ்வளவு பெரிய வெற்றிக்கு சொந்தக்காரராக உள்ளார் என்றால் அதற்குக் காரணம் அவரது தனித்தன்மை எனலாம்.

சாய் பல்லவி திரைக்கு முன்னால் மட்டுமல்ல திரைக்கு வெளியேயும் அழகானவர் என்பதற்கு உதாரணம் அண்மையில் இரண்டு கோடி ப்ராஜெக்ட் ஒன்றினை அவர் மறுத்திருப்பதுதான். மேக்கப் நிறுவனம் ஒன்றில் ப்ராண்ட் அம்பாசிடராக இருக்கவும், அதன் விளம்பரங்களில் தோன்றவும் சாய் பல்லவிக்கு அளிக்கப்பட்ட சம்பளம் அது. ஆனால் அவர் அதை மறுத்ததுடன், இயற்கை அழகே சிறப்பானது என்று உண்மையிலேயே நம்புகின்றவர். சினிமாவிலும் மேக்கப் போடாமல் நடிப்பதையே விரும்புகிறார். தன்னுடைய திறமையும், தன்னம்பிக்கையும் மட்டுமே நம்பி திரையில் வெளுத்து வாங்கிக் கொண்டிருப்பவர் சாய் பல்லவி.  தன் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்து நல்ல கதைகளையும், மிக கடினமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தேடுத்து நடித்து வருகிறார். அவரது தோற்றத்துக்கும், சிரிப்புக்கும்,  இயல்பான நடிப்புக்கும், நோ ஃபில்டர் நோ மேக்கப் அழகுடன் திகழும் கன்னச் சிவப்புக்கும் திரையுலகில் பெரும் வரவேற்பு இருக்கிறது.

இப்படி அனைவரின் மனங்களையும் கொள்ள கொண்ட ரெளடி பேபியான சாய் பல்லவியின் பிறந்த நாளான இன்று, அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை துறையைச் சேர்ந்த பலரும், மீடியாவும் தங்களது வாழ்த்துக்களை மனம் திறந்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். தனது ஃபேஸ்புக்கில் அனைவருக்கும் நன்றி கூறி பதிவிட்டிருக்கிறார் சாய் பல்லவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments